Followers

Saturday 4 March 2017

திருவாசகம் - Thiruvasagam


திருவாசகம்
சிவபுராணம் (2)

பொருள்:
என்னுடைய (மனம் கண்டபடி உழலும்) வேகத்தைப் போக்கி ஆண்டுகொண்ட மன்னனின் திருவடி வெல்லட்டும். பிறப்பினை நீக்குபவனாகிய தலைக்கோலமுடைய பெருமான் அணி சேர் கழல்கள் வெல்லட்டும். இறைவனை இல்லை என்று மறுத்து (ஒதுங்கி) நிற்பவர்களுக்கு, வெகு தூரத்தில் உள்ள (அரிய பொருளாக இருக்கும்) பெருமானின் பூப்போன்ற மென்மையான கழல்கள் வெல்லட்டும். கைகளைக் கூப்பி வழிபடுவர்களுக்கு (மிக அருகில்) உள்ளத்திலே மகிழ்ந்து இருக்கும் இறைவனுடைய கழல்கள் வெல்லட்டும். தலை தாழ்ந்து வணங்குவார்களை மிக உயர்ந்த நிலைக்கு ஓங்கச் செய்யும் பெருங்குணம் வாய்ந்தவனுடைய கழல்கள் வெல்லட்டும்.


விளக்கம்:

மன ஓட்டத்தை தவிர்ப்பவனும், பிறவித் துன்பத்தை நீக்குபவனும் இறைவனே என்பது, “வேகங் கெடுத்தாண்ட வேந்தன்”, “பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்” என்பவற்றால் விளங்கும். பிஞ்ஞகன் என்றால் தலைக்கோலம் உடையவன். அதாவது, பிறைநிலா, கங்கை, அரவம் முதலியன தலைக்கோலங்கள்.

இறைவனை இல்லை என்று மறுத்து, ஒதுங்கி நிற்பவர்களுக்கு இல்லாதவராகவே இருப்பார். அதையே “புறத்தார்க்குச் சேயோன்” என்றார். இறைவன் குடியிருக்கும் இரண்டு இடங்களாக நெஞ்சத்தாமரையும், துவாதசாந்தப் பெருவெளியும் குறிக்கப்படுகின்றது. துவாதசாந்தப் பெருவெளி என்பது தலைக்கு பன்னிரண்டு அங்குலத்திற்கு மேல் அமைந்திருக்கும் இடமாகும். இவ்விரண்டு இடங்களிலும் இறைவனை நினைத்து வழிபடவேண்டும் என்பதற்காக மாணிக்கவாசகர், “கரம் குவிவார், சிரம் குவிவார்” எனக் குறிப்பிடுகிறார்.

திருவாசகம் - Thiruvasagam


திருவாசகம்
சிவபுராணம் (1)

பொருள்:
நமசிவாய எனும் திருவைந்தெழுத்து (பஞ்சாட்சரம்) மந்திரம் வாழ்க. திருவைந்தெழுத்தின் வடிவாக விளங்கும் இறைவனது திருவடி வாழ்க. கண்ணிமைக்கும் நேரமும் கூட என் நெஞ்சத்திலிருந்து பிரியாதவனுடைய திருவடி வாழ்க. திருவாவடுதுறை ஆண்டருளும் குருவாகிய மாணிக்கத்தின் திருவடி வாழ்க. தானே ஆகமமாகி நின்று நமக்கு அருகில் வருபவனுடைய திருவடி வாழ்க. ஒருவனாகியும் பல உருவங்கொண்டு இருக்கும் இறைவனின் திருவடி வாழ்க!

விளக்கம்:

நமசிவாய எனும் திருவைந்தெழுத்து மந்திரம் சிவபெருமானைக் குறிக்கும். ந-கரம் திருவடியாகவும், ம-கரம் உடலாகவும், சி-கரம் தோளாகவும், வ-கரம் முகமாகவும், ய-கரம் முடியாகவும் அமைந்துள்ளதாக சாஸ்திரம் கூறும்.
“ஆடும் படிகேள்நல் லம்பலத்தான் ஐயனே
நாடுந் திருவடியி லேநகரம் -
கூரும் மகரம் உதரம் வளர்தோள் சிகரம்
பகருமுகம் வாமுடியப் பார்”

கண்ணிமைக்கும் நேரம் கூட நெஞ்சகத்தில் இருந்து பிரியாதவன் என்றமையால், இறைவன் அகத்தே நெஞ்சத்தாமரையில் வீற்றிருக்கும் தன்மை விளக்கப்படுகின்றது. “கோகழியாண்ட குருமணி” என்றமையால், இறைவன் புறத்தே திருப்பெருந்துறையில் தம்மை ஆண்டருளின பெருமையையும் மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்.

”ஏகன் அநேகன்” என்றால் ‘ஒன்றன், ஒன்றல்லன்’ எனவாகும். இறைவன் தன்மையால் ஒரு பொருளாகவும், உயிர்களோடு கலந்திருத்தலால் பல பொருளாகவும் திகழ்கிறான் என்ற உண்மையும் விளக்கப்படுகின்றது.