Followers

Wednesday 25 May 2016

நியு யார்க்கின் கீதா மண்டீர்

கீதா மண்டீர் ஆஷ்ரமம்

ஐக்கிய அமெரிக்காவின் தலைநகரான நியு யார்க்கில் 150-க்கும் மேற்பட்ட இந்துதர்ம ஆலயங்கள் அமைந்துள்ளன. அவற்றுள் ஒன்றுதான் ‘கீதா மண்டீர்’.

ஸ்வாமி ஜகதீஸ்வரனாந்தர் என்பவரால் 1979-ஆம் ஆண்டு எழுப்பப்பட்ட இந்த ஆலயம் நியு யார்க் மக்களுக்கு ஆன்மீக போதனைகளையும், சனாதன தர்ம சாரத்தையும் ஊட்டும் தளமாக திகழ்கின்றது.

கோயிலின் வெளித்தோற்றம்

ராதாகிருஷ்ணர், ஸ்ரீகணேஷர், பார்வதிசிவன், ஸ்ரீஹனுமான், சீதாராமர், துர்கையம்மன் என எல்லா இந்துதெய்வங்களும் இங்கு வழிபடப்படுகின்றனர்.

தெய்வங்கள்
வேத பாடங்களும், பகவத் கீதை உரைகளும், பஜனைகளும் இந்த கோவிலில் அடிக்கடி நடத்தப்படுகின்றன. இதனால் நியு யார்க்கில் வாழும் இந்துக்களும் இதர தர்மசீலர்களும் மிகுந்த பயனடைகின்றனர். சத்தியத்தை தேடுபவர்கள் இந்துதர்மத்தை நன்கு அறிந்து, தர்மபாதையில் செயல்பட இந்த ஆலயம் உறுதுணையாக அமைகின்றது.

அதிகாரப்பூர்வ வலைத்தளம்
http://www.geetatemple.org/

ஜெர்மனியில் அருள்பாலிக்கும் காமாக்ஷி அம்பாள்



ஜெர்மனியின் ’ஹம்’மில் அமைந்திருக்கும் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் கோவில் சுமார் 26 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகும். இக்கோவில் தமிழ்நாட்டுக் கோவில்களைப் போலவே அமைந்திருப்பது மற்றொரு சிறப்பாகும். திருவிழாக்காலங்களில் 3000-க்கும் அதிகமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வருவர். இனம், மொழி போன்றப் பிரிவினைகளைக் கடந்து எல்லா மக்களும் காமாக்ஷி அம்பாளின் திருவருளைப் பெற பக்தியோடு அம்பாளை வணங்குவதைப் பார்க்க உள்ளக்களிப்பாக இருக்கும்.

வண்ணம் பூசப்பட்ட கோயில் கோபுரம்

காமாக்ஷி அம்பாள்


திருவிழா தேரோட்டம்

ஆரத்தி பெறும் பல்லின பக்தைகள்

பக்தர்கள்
ஜெர்மனியில் சுமார் 120,000 இந்துக்கள் வாழ்கின்றனர். அவர்களில் 45,000 தமிழீழ இந்துக்கள் ஆவர். 40,000 இந்திய இந்துக்களும், 10,000 ஆப்கானிஸ்தானிய இந்துக்களும், மீதமுள்ளவர்களில் சுமார் 20,000க்கும் மேற்பட்டோர் ஜெர்மானிய இந்துக்கள் ஆவர்.[Remid, 2011]

ஜெர்மனியில் 50க்கும் அதிகமான இந்து கோவில்கள் அமைந்துள்ளன. ராமாயன் ஹரி கிருஷ்ணா ஆலயம், கற்பக விநாயகர் ஆலயம், ஸ்ரீ பிள்ளையார் கோவில், ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம், திருநல்லூர் ஸ்ரீ ஆறுமுக வேலழகன் ஆலயம், ஹரிஓம் மண்டீர், ஸ்ரீ சிவசக்தி குமரன் ஆலயம், ஸ்ரீதுர்கா ஆலயம், ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் கோவில், கந்தஸ்வாமி கோவில், குறிஞ்சிகுமரன் கோவில் மற்றும் இதர கோவில்கள் புகழ்ப்பெற்ற கோவில்களாக திகழ்கின்றன.

ஜெர்மனி வாழ் இந்துக்கள்

1950-ஆம் ஆண்டில் ஜெர்மனியின் மக்கள்தொகையில் 98% கிறிஸ்துவர்களாக இருந்தனர், 2011-நிலவரப்படி சுமார் 61.5% கிறிஸ்துவர்கள் ஜெர்மனியில் வாழ்கின்றனர். 38.8% க்கும் அதிகமானோர் மதமற்றவர்களாக உள்ளனர். ஜெர்மனி வாழ் மக்கள் வேதாந்தம், யோகா, பௌத்த மதம் போன்ற இந்திய சமயங்கள் மற்றும் பழக்கவழக்கங்கள் மீது அதிக ஈடுபாடு காட்டுகின்றனர்.

அதிகாரப்பூர்வ வலைத்தளம்
kamadchi-ampal.olanko.de/

Tuesday 24 May 2016

கர்ணனை விட வலிமையானது கர்மவினை


நாம் யாருக்கேனும் தீங்கு இழைத்தால் அதற்கான பலனை பின்னாளில் நாம் அனுபவித்தே தீர வேண்டியிருக்கும். இதுதான் கர்மநியதி.

கர்ணன் வாழ்க்கையிலும் அப்படி நடந்தது, அதுவே இக்கதையாகும். முனிவர் ஒருவர் காட்டில் தியானம் செய்து கொண்டிருந்தார். அவரது ஆசிரமத்தைச் சேர்ந்த பசுவும், கன்றும் அருகே புல்லை மேய்ந்து கொண்டிருந்த நேரத்தில், கன்றின் மீது அம்பு ஒன்று பாய்ந்தது. அக்கன்று துடிதுடித்து இறந்தது.

இறக்கும் தருவாயில் அக்கன்றின் வேதனைக் கதறல் கேட்டு முனிவர் தியானம் கலைந்தது. அவர், இறந்த கன்றையும், தாய்ப்பசு கண்ணீருடன் நிற்பதையும் பார்த்தார். அம்பு எய்தி பசுவைக் கொன்றவனைத் தேடினார்.

அப்போது ஒரு வீரன் கையில் வில்லுடன் அங்கு வந்தான். அவன்தான் அம்பை எய்திருக்க வேண்டும் என முனிவர் கண்டுபிடித்தார். அவரது கோபம் அந்த வீரன் மீது சாபமாக அமைந்தது. "சிறு கன்றின் மீது அம்பு எய்தி கொன்றவனே! அதற்கான கர்மபலனை நீ அனுபவித்தே தீரவேண்டும்! உனக்கு முடிவுகாலம் வருகையில், உன் தேரில் நின்று நீ போர் புரிகையில், தேரின் சக்கரங்கள் மண்ணுக்குள் புதையும். அந்த நேரமே உனக்கு மரண நேரமாய் அமையும் என்பதை உணர்வாயாக!" என்றார்.

அந்த வீரன் தான் கர்ணன். கன்றைக் கொன்ற தன் செயலால் வருந்தினான் கர்ணன். ஆனாலும், கர்மவினையின் செயல் இது என தன்னை தேற்றிக் கொண்டான். அந்த முனிவர் கூறியபடியே பாரதப் போரில் கர்ணனின் மரணம் நிகழ்ந்தது.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் கண்டிப்பாக பலன் உண்டு. ஆகையால், நாம் செய்யும் செயல் யாரையும் பாதிக்காதபடி இருக்கவேண்டும். நன்றும் தீதும் பிறர் தர வாரா.

பகவத் கீதை உணர்த்தும் 26 தெய்வீக குணங்கள்



பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத்_கீதை 16:1-3 ஸ்லோகங்களில், மனிதர்கள் கொண்டிருக்க வேண்டிய 26 தெய்வீக குணங்களை எடுத்துக் கூறுகிறார். அவை பின்வருமாறு:

1) அபயம் – பயமின்மை/அஞ்சாமை,
2) சத்வ சம்சுத்தி – நற்குணம் நிறைந்த தூய உள்ளம்,
3) ஞானயோக வியவஸ்திதி – இறைவன் மற்றும் ஆன்மாவைப் பற்றிய அறிவை பெருக்கும் ஞானயோகத்தில் ஈடுபடுதல்,
4) தானம் – தானம்/ கொடை
5) தமம் – அடக்கமுடைமை
6) யக்ஞம் – வேள்வி/ தியாகம் (ஈகை)
7) ஸ்வத்யாயம் – சமய நூல்களைக் கற்றல் (எ.கா. திருமுறை, பகவத் கீதை)
8) தபம் – தவம்
9) ஆர்ஜவம் – எளிமை (பகட்டைக் காட்டிக் கொள்ளாமல் இருத்தல்)
10) அஹிம்சை – இன்னா செய்யாமை (எந்த உயிரையும் துன்பப்படுத்தாமல் இருத்தல்)
11) சத்யம் – வாய்மை (உண்மைக்குப் புறம்பான சொற்களைப் பேசாமல் இருத்தல்)
12) அக்ரோதம் – சினங்கொள்ளாமை/வெகுளாமை (மூடத்தனமான காரணத்துக்காக கோபித்துக் கொள்ளாமல் இருப்பது)
13) தியாகம் – துறவறம் (பொருள்களின் மீது கொள்ளும் பற்றைத் துறத்தல்)
14) ஷாந்தி – அமைதி/பொறையுடைமை (பொறுமையாக இருத்தல்)
15) அபைஷுனம் – தீவினையச்சம் (துன்பம் விளைவிக்கும் தீயசெயல்கள், தீயசொற்கள் போன்றவற்றை தவிர்த்தல்)
16) தயை பூதேஷு – அருளுடைமை (எல்லா உயிர்களிடமும் கருணை காட்டுதல்)
17) அலோலுப்த்வம் – வெஃகாமை (பேராசை இல்லாமை; பிறர்பொருளைக் கவராமை)
18) மார்தவம் – பெருந்தன்மை/முரட்டுத்தனமில்லாமல் இருத்தல்
19) ஹ்ரீரம் – நாணுடைமை (ஆரவாரமின்றி அடக்க ஒடுக்கமாக இருத்தல்)
20) அசாபலம் – அசையா உறுதியுடைமை
21) தேஜஸ் – ஊக்கமுடைமை
22) க்‌ஷாமம் – மன்னிக்கும் குணம் கொண்டிருத்தல்
23) த்ரீதி – இடுக்கண் அழியாமை (எத்தகைய துன்பம் வந்தாலும், மனம்தளராமல் இருத்தல்)
24) ஷௌச்சம் – தூய்மை (உள்ளம், உடல், செயல் தூய்மை)
25) அத்ரோஹம் – அழுக்காறாமை (பொறாமை குணத்தில் இருந்து நீங்கியிருத்தல்)
26) அதிமானிதம் – புகழுடைமை (நல்லவர்கள் பழிக்கும்படி நடந்து கொள்ளக் கூடாது)

இந்த 26 தெய்வீக குணங்களை ஆங்கிலத்தில் (26 divine qualities) எனக் குறிக்கின்றனர்.

வேதாந்தம்

யஜுர்வேதத்தின் மிகப் பழைமையான பிருகதாரண்யக உபநிடதத்தில் (5.2.3) பிரம்மதேவர் மனிதர்களுக்காக அளித்த மூன்று உபதேசங்கள் உள்ளன. அவை:

  1. அடக்கமுடைமை (தமம்)
  2. ஈகை (தானம்)
  3. அருளுடைமை (தயை)

இம்மூன்றும் மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய ஒழுக்கநெறிகளாக உள்ளன. இவை மனிதர்களின் வாழ்வியல் மேன்மைக்கும் உலக நிலைப்பாட்டிற்கும் ஒத்திசைக்கின்றன.

திருக்குறள்

திருக்குறளிலும் மேற்கண்ட பண்புகள் விளக்கப்படுகின்றன. ஒருவர் திருக்குறளைப் படித்தாலே மேற்கூறிய பண்புகளை விரிவாக விளங்கி கொள்ளலாம். அடக்கமுடைமை (அதி.13), ஈகை (அதி.23), தவம் (அதி.27), இன்னா செய்யாமை (அதி.32), வாய்மை (அதி.30), துறவு (அதி.35), தீவினையச்சம் (அதி.21), அருளுடைமை (அதி.25), வெஃகாமை (அதி.18), நாணுடைமை (அதி.102), ஊக்கமுடைமை (அதி.60), இடுக்கண் அழியாமை (அதி.63), அழுக்காறாமை (அதி.17), புகழ் (அதி.24). வள்ளுவர் மற்ற குணநலன்களையும் விளக்கியுள்ளார். உதாரணமாக, தூய்மை- வினைத்தூய்மை (அதி.66), உறுதியுடைமை- வினைத்திட்பம் (அதி.67), பொறையுடைமை (அதி.16), சினங்கொள்ளாமை- வெகுளாமை (அதி.31), அவா அறுத்தல், மெய்யுணர்தல், அவை அஞ்சாமை (சொற்களத்தில் பேசும் துணிவு) போன்ற இன்னும் பல அதிகாரங்களில் மற்ற தெய்வீக குணங்களைப் பற்றி வள்ளுவர் விளக்கியுள்ளார்.

ஒருவர் பகவத் கீதையை தன் ஆன்மீக ஈடேற்றத்திற்காகவும், திருக்குறளை சமூக வாழ்வியல் நெறிக்காகவும் கற்க வேண்டும். ஆன்மீகத்திலும் சமூக வாழ்வியல் நெறிகளிலும் சிறந்தவன், மேன்மையான இறைவனை அடைகின்றான்.

Monday 23 May 2016

ஆதிசங்கரரின் தாய் பாசம்



திசங்கரருக்கு இளம் வயதிலேயே துறவு மனப்பான்மை ஓங்கி இருந்தது. தாய் ஆர்யாம்பாளிடம் துறவுக்கு அனுமதியைக் கேட்க, தன் ஒரே மகன் துறவியாவதைக் காண சகிக்க முடியாத அந்தத் தாய் மறுத்து விட்டார். இளம் வயதிலேயே விதவையான அந்தத் தாயிற்கு அந்த உத்தம மகனை விடப் பெரிய உறவோ, சொத்தோ இருக்கவில்லை. தாயின் அனுமதியில்லாமல் துறவறம் மேற்கொள்ள ஆதிசங்கரருக்கு மனம் ஒப்பந்தம் அளிக்கவில்லை.

ஒருமுறை பூர்ணா நதியில் குளிப்பதற்காக தாயுடன் சென்றிருந்த ஆதிசங்கரரின் காலை ஒரு முதலை பற்றிக் கொண்டது. ஆதிசங்கரர் உரத்த குரலில் தாயிடம் சொன்னார், “தாயே! என் காலை ஒரு முதலை பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறது. நான் துறவறம் மேற்கொள்ள நீங்கள் அனுமதி தந்தால் அது என்னை விட்டு விடும்”. ஓர் இக்கட்டான நிலைக்கு ஆளான ஆர்யாம்பாள் வேறு வழியில்லாமல் மகன் துறவியாவதற்கு ஒப்புதல் அளித்தார். ஆதிசங்கரர் தகுந்த மந்திரங்களை எல்லாம் சொல்லி அந்த நதியிலேயே துறவறம் மேற்கொண்டார். முதலை அவர் காலை விட்டு விட்டது. (அந்த முதலை பிரம்மாவின் சாபம் பெற்ற ஒரு கந்தர்வன் என்றும் ஆதிசங்கரரின் கால் பட்டதும் அவன் சாப விமோசனம் பெற்றான் என்றும் சொல்லப்படுகிறது)

கரையேறிய ஆதிசங்கரர் தன் வீடு புகவில்லை. வீடு வந்த பின்னும் வாசலிலேயே “பிக்ஷாந்தேஹி ” என்று மகன் நின்ற போது தான் ஆர்யாம்பாளுக்கு உண்மை முழுமையாக உறைத்திருக்க வேண்டும். முன்பே ஒரு முறை மகன் துறவியாவது போல் கனவு கண்டு அந்தக் கனவுக்கே துடித்துப் போன அந்தத் தாயின் நிலைமை அப்போது எப்படி இருந்திருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. எல்லையில்லாத சோகத்தில் மூழ்கிய ஆர்யாம்பாள் மகன் இருந்தும் இல்லாதது போல் வாழ வேண்டி வரும் நிலைமையையும், ஈமக்கிரியை கூட மகன் இல்லாமல் போகும் அவலத்தையும் எண்ணி மிகவும் வருந்தினார். உறவுகளைத் துறக்கும் போது உறவுகளுடன் கூடிய அனைத்தையும் முடித்துக் கொள்வதால் துறவிகள் பெற்றவர்களுக்கு ஈமக்கிரியைகள் கூட செய்யக் கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் தாயின் சோகத்தால் நெகிழ்ந்த ஆதிசங்கரர் அந்த விதியை மீறித் தன் தாயிற்கு வாக்களிக்கிறார். ”உன் அந்திம காலத்தில் உன் ஈமக்கிரியைகளைச் செய்ய நான் கண்டிப்பாக வருவேன்”.

ஆண்டுகள் பல கழிந்த பின் ஆர்யாம்பாள் மரணப்படுக்கையில் கிடக்கையில் தன் ஞான திருஷ்டியால் அதை அறிந்த ஆதிசங்கரர் உடனடியாகத் தாயிடம் வந்தார். ஒரு துறவியான பின் தாயிற்கு ஈமக்கிரியை செய்வதா என்று சாஸ்திரம் படித்த உறவினர்கள் குமுறினார்கள். சிதைக்குத் தீ மூட்ட நெருப்பைக் கூடத் தர மறுக்க தன் சக்தியாலேயே தாயின் சிதைக்கு ஆதி சங்கரர் தீ மூட்டினார். அரும் பெரும் தத்துவங்களையும், உபநிடத சாரங்களையும் உலகத்திற்குத் தந்த ஆதிசங்கரர் தாயின் அந்திம காலத்தில் மடியில் கிடத்திக் கொண்டு பாடிய “மாத்ரு பஞ்சகம்” மிகவும் நெகிழ்ச்சியானது. அறிவால், ஞானத்தால், பக்தியால் எத்தனையோ பொக்கிஷங்களைத் தந்த ஆதிசங்கரர் உணர்ச்சி பூர்வமாக எழுதியது அந்த ஐந்து சுலோகங்களை மட்டுமே. ஜகத்குருவான ஆதிசங்கரர், ஒரு மகனாக அன்னையின் பாசத்தையும், தியாகத்தையும் எண்ணிப் பாடிய மாத்ரு பஞ்சகம் இது தான் -

“அம்மா, என்னைக் கருவில் தாங்கி நான் பிறக்கும் வரை உடல் மெலிந்து நீ பட்ட கஷ்டங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்? குழந்தையான என் மலம் மூத்திரம் எல்லாம் சுத்தம் செய்து, எனக்காகப் பத்தியம் இருந்து என்னைக் காப்பாற்றி வளர்த்த உனக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்? அன்று முதல் இன்று வரை நீ எனக்கு செய்ததற்கு கைம்மாறு செய்ய எனக்குப் பல ஜென்மங்கள் போதாதே! நான் குருகுலத்தில் இருந்த ஒரு சமயம் நான் துறவு பூண்டதாக நீ கனவு கண்டாய். உடனே நீ அங்கு ஓடி வந்து கதறினாய். அதைக் கண்டு எல்லோரும் என்ன விஷயம் என்று கேட்க உன் கனவைச் சொல்லிக் கதற அதைக் கேட்ட குருகுலம் முழுவதும் கதறியதே! அத்தகைய உனது காலில் வீழ்ந்து நான் இன்று கதறுகிறேன். எல்லா சக்திகளும் அற்றுப் போன கடைசி காலத்தில் கொஞ்சம் தண்ணீர் தந்தால் ஆறுதல் உண்டாகும். அந்தப் பாக்கியமும் எனக்குக் கிடைக்கவில்லையே. பின்பு ஒவ்வொரு முறையும் திதியில் சிரார்த்தம் செய்யும் பாக்கியமும் இல்லாத சன்னியாசியாக நான் இருக்கிறேனே. அம்மா! என்னைக் கூப்பிடும் போதெல்லாம் முத்தே, மணியே, கண்ணே, ராஜாவே, குழந்தாய் நீ வெகு காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்திய வாய்க்கு வாய்க்கரிசி போடுகிறேனே. தாயே பிரசவ வேதனை தாளாமல் அம்மா, அப்பா, சிவனே, கிருஷ்ணனே, கோவிந்தா, முகுந்தா என்றெல்லாம் கதறிய ஒரு கதறலுக்கு என்னால் பதில் கூற முடியுமா? தாயே உன்னை வணங்குகிறேன்.”

கஷ்டங்களுக்கு கடவுளா காரணம்?


வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சி மட்டும் தான் வேண்டுமென நினைப்பவர்கள் ஏராளமானோர் வாழ்கின்றனர். இன்பம் வரும்போது இறைவனை எண்ணாதவர், துன்பம் வருங்கால் மட்டுமே இறைவனை நாடுவர். துன்பம் வரும்போது, “கடவுளே என்னை மட்டும் ஏன் இப்படி சோதிக்கிறாய்?” என்ற கேள்வியும் கேட்பர். கடவுள் தம் பக்தர்களைச் சோதிப்பது உண்டு; ஆனால் எல்லா மனிதர்களையும் சோதிப்பது இல்லை. ஆதலால் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அனுபவிக்கும் கஷ்டங்களுக்கு கடவுள் காரணம் இல்லை.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அனுபவிக்கும் இன்ப-துன்பங்களுக்கு நீங்கள் தான் முழு பொறுப்பு. இதுதான் வேதங்களில் கூறப்படும் உண்மை. யஜுர்வேதத்தைச் சேர்ந்த மைத்ராயணீய உபநிடதம் கூறுவது என்னவென்றால்,

“ஆசை, பேராசை, கோபம், வெறுப்பு, மருட்சி, பயம், மனத்தளர்ச்சி, பிறருக்கு கொடுத்து உதவாத மனம், பசி, தாகம், பிணி, மூப்பு, துக்கம், இன்னும் ஏராளமான வேறுபட்ட உணர்ச்சிகளின் உறைவிடம் மனிதனின் உடல். இவ்வாறு பல உணர்ச்சிகளைக் கொண்டிருக்கும் உன்னால் எவ்வாறு மகிழ்ச்சியை மட்டுமே உணர முடியும்? செழித்து ஓடும் நதிகள் கூட சில காலங்களுக்குப் பின்னர் வற்றிபோய் விடுகின்றன; ஓங்கி நிற்கும் மலைகள் கூட சில காலங்களுக்குப் பின்னர் சரிந்து விடுகின்றன; வானத்தில் மின்னும் நட்சத்திரங்கள் கூட குறிப்பிட காலத்திற்குப் பின்னர் மறைந்து விடுகின்றன; அழகாக உருண்டோடும் அலைகளும் கொடூரமாகி கரையை விழுங்குகின்றன; இதமான காற்று சிலவேளைகளில் பலமாகி தாக்குகின்றன. இவ்வாறு இன்பமும் துன்பமும் நிறைந்தது தான் இந்த உலகம். இன்பமும் துன்பமும் ஒருசேர அடங்கியுள்ள இந்த உலகத்தில், நீ இன்பத்தை மட்டுமே உணர முடியுமா?” (1:3-4)

உயர்ந்த உண்மைகளின் உறைவிடமான உபநிடதங்கள் நமக்கு உண்மைகளை வெள்ளிடை மலையாக காட்ட ஒருபோதும் தவறியதில்லை. இந்த உலகத்தில் இன்பமும் துன்பமும் கலந்து உள்ளது. இன்று இன்பமாக இருப்பவன், நாளை துன்பப்படலாம். இன்று துன்பப்படுபவன், நாளை இன்பமாக வாழலாம். மனித வாழ்க்கையில் ஏற்படும் இன்பமும் துன்பமும், சீதோஷ்ண நிலையில் ஏற்படும் வெயில்-குளிர் போன்ற பருவகாலங்களுக்கு சமமானவை. இதனாலே பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், “

”இன்ப துன்பங்களின் நிலையற்ற தோற்றமும் காலப் போக்கில் ஏற்படும் மறைவும், கோடையும் குளிரும் பருவ காலத்தில் தோன்றி மறைவதைப் போன்றதாகும். புலன்களின் உணர்வாலேயே அவை எழுகின்றன; எனவே, இவற்றால் பாதிக்கப்படாமல், பொறுத்துக் கொள்ளக் கற்றுக் கொள்.” (பகவத் கீதை 2:14)

ஒருவனின் வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் எப்போதும் மாறிமாறி ஏற்படுகின்றன. ஆனால் இவை இரண்டுமே நிலையானவை அல்ல. இன்பமும் துன்பமும் ஒருவனின் கர்மவினை மற்றும் வாழ்க்கை நிலை ஆகிய இரண்டையும் பொறுத்து நேர்கின்றன. ஒருவனின் விதி அவனின் கையில் தான் அமைந்துள்ளது. இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும் அதனால் பாதிக்கப்படாமல் இருக்க பழகிக் கொள்ளவேண்டும். திருவள்ளுவர் ஒரு சிறப்பான அறிவுரையைக் கூறுகின்றார்,

“இன்பம் வந்த காலத்தில் அந்த இன்பத்திற்கு மயங்கி விடாதவன், துன்பம் வரும் காலத்தில் அந்த துன்பத்தால் பாதிக்கப்படுவதும் இல்லை” (குறள் 628)

நாம் அனுபவிக்கும் இஷ்டங்களுக்கும் கஷ்டங்களுக்கும் கடவுள் ஒருபோதும் காரணகர்த்தா ஆகமாட்டார். நம்முடைய செயல்களே நாம் போகும் பாதையை வடிவமைக்கின்றன. இறைவழிபாட்டில் ஈடுபடுதல், மற்றவருக்கு உதவுதல், யோகாசனம் பயில்தல், ஆன்மீக நூல்களைக் கற்றல் போன்ற நல்ல செயல்களில் ஈடுபட வேண்டும். கடவுளிடம் தூய்மையான பக்தியும் அன்பும் கொண்டிருத்தல் தான் உண்மையான மகிழ்ச்சியாகும். மற்றவை யாவும் தற்காலிக இன்பத்தை தருபவை. தற்காலிகமான இன்பம் அனைத்திலும் துன்பமும் அடங்கியிருக்கும். இதுவே ஜகத் சத்யம் (உலகத்தின் உண்மையான இயல்பு).

வேதாந்தம்










கோபமே மனிதனைக் கொல்லும் – மகாபாரதம்

இந்துதர்ம போதனைகளில் அரிஷத்வர்கம் என்று சொல்லப்படும் மனிதனின் ஆறு எதிரிகளில் ஒன்றுதான் கோபம். அதைப் பற்றி மகாபாரதத்தில் யுதிஷ்டிரர் சிறப்பாக விளக்குகின்றார்.
கானகத்திற்கு நாடு கடத்தப்பட்ட பாண்டவர்கள், மாலைப்பொழுதில் திரௌபதியுடன் அமர்ந்து, துயரத்துடன் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர்.

“யுதிஷ்டிரரே, உண்மையில் உமக்கு கோபம் என்பதே இல்லை. இல்லாவிட்டால், உமது தம்பிகள் மற்றும் எனது (துன்ப) நிலையைக் கண்டும், உமது மனம் ஏன் அசையவில்லை? உமக்கு கோபமே வராதா?” என திரௌபதி யுதிஷ்டிரரிடம் கேட்கிறாள்.



யுதிஷ்டிரர் சொன்னார், "கோபமே மனிதனைக் கொல்லும், அதே வேளை கோபமே மனிதனை வளம்பெற வைக்கும். ஓ திரௌபதியே, கோபமே செழிப்பு மற்றும் துரதிர்ஷ்டங்களுக்கு வேர்க்காரணமாகும். எவன் கோபத்தை அடக்குகிறானோ அவன் செழிப்பை அடைகிறான். கோபத்துக்குத் தன்னை ஒப்புக் கொடுக்கும் மனிதன், தனது கடும் கோபத்தின் விளைவாக துரதிர்ஷ்டத்தை வரவழைத்துக் கொள்கிறான். உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களின் அழிவுக்கும் கோபமே காரணமாக இருக்கிறது. உலகத்திற்கே அழிவைக் கொண்டுவரும் கோபத்தை நான் எப்படி விரும்பி ஏற்பேன்? கோபம் கொள்ளும் மனிதன் பாவம் இழைக்கிறான்.

கோபம் கொண்ட மனிதன் தனது குருவைக் கூட கொல்வான். கோபம் கொண்ட மனிதன் தன்னை விட அறிவில் சிறந்தவர்களைக் கூட கடுஞ்சொற்களால் அவமதிப்பான். கோபம் கொண்ட மனிதன் எது சொல்லப்பட வேண்டும் எது சொல்லப்படக்கூடாது என்பதற்குண்டான வேறுபாட்டை அறியாமல் போகிறான். கோபம் கொண்ட மனிதன் செய்ய தகாத செயல்களையும் செய்வான். கோபம் கொண்ட மனிதனால் சொல்ல தகாத வார்த்தைகளையும் சொல்வான். கோபத்தின் காரணமாக ஒரு மனிதன், அப்பாவிகளையும் தயங்காமல் கொன்றுவிடுவான். இக்குறைபாடுகளைக் கண்டே, ஞானமுள்ளோர், உயர்ந்த செழிப்பை இப்பிறவியிலும் மறு பிறவியிலும் அடைய தங்கள் கோபத்தை அடக்கிக் கொள்கின்றனர். இதன் காரணமாகவே அமைதியான ஆன்மா கொண்டோர் கோபத்தைத் தங்களிடம் இருந்து விரட்டுகின்றனர். இப்படி இருக்கும் போது எங்களைப் போன்றோர் எப்படி கோபத்திற்கு ஆளாகுவோம்?

ஓ திரௌபதியே, இதையெல்லாம் கருதியே எனது கோபம் தூண்டப்படவில்லை. இதன் காரணமாக அறம்சார்ந்தவர்கள் கோபத்தை வென்றவர்களைப் பாராட்டுகிறார்கள். உண்மையில், நேர்மையானவனும் மன்னிக்கும் குணமுள்ளவனும் எப்போதும் வெற்றி பெறுவான் என்பதே அறம்சார்ந்தவர்களின் கருத்து.

உண்மையே பொய்மையைவிட நன்மை; மென்மையான நடத்தையே கடுமையான நடத்தையைவிட நன்மை. என்னைப்போன்ற ஒருவன், துரியோதனனைக் கொல்லும் காரணத்திற்காக, பல குறைகளையுடையதும், அறம்சார்ந்தவர்கள் தங்கள் ஆன்மாவில் இருந்து விரட்டும் கோபத்தை மேற்கொள்வது, எங்ஙனம்? பொங்கி வரும் கோபத்தை தனது ஞானத்தால் அடக்குபவனே பலம் கொண்ட மனிதன் என்று உண்மையை அறிந்த கற்றவர்கள் சொல்கிறார்கள்.

திரௌபதியே, கோபம் கொண்ட மனிதன் நடைபெறும் காரியங்களை அதன் உண்மைத் தன்மையுடன் பார்ப்பதில்லை. கோபம் கொண்ட மனிதன் தனது வழியைக் காண்பதில்லை. அவன் மனிதர்களையும் மதிக்க மாட்டான். ஆகையால், புத்தி கொண்ட மனிதன் கோபத்தை தூரத்தில் விலக்கி வைக்க வேண்டும். கோபத்தில் மூழ்கிய மனிதன் பராக்கிரமசாலிக்கே உரிய பெருந்தன்மை, கண்ணியம், தைரியம், திறமை மற்றும் பிற குணங்களை எளிதாக அடைவதில்லை. கோபத்தைக் கைவிடுவதால் ஒரு மனிதன் சரியான சக்தியை வெளிப்படுத்த முடியும்.

திரௌபதியே, காயப்பட்டவர்கள் தங்கள் காயங்களுக்கு பதிலடி கொடுப்பதும், மற்றொருவனால் தண்டிக்கப்பட்டவன் அந்த மற்றொருவனை பதிலுக்கு தண்டிப்பதும் அனைத்து உயிர்களின் அழிவுக்கும் காரணமாக இருக்கும். உலகத்தில் பாவம் அதிகரிக்கும். வேறு மனிதனிடம் தீய வார்த்தைகளைக் கேட்கும் மனிதன், பதிலுக்கு அந்த வார்த்தைகளைத் திருப்பிச் சொல்வதும், தந்தையர் மகன்களையும், மகன்கள் தந்தைகளையும், கணவர்கள் மனைவியரையும், மனைவியர் கணவர்களையும் கொல்லும் நிலை ஏற்படும்.

ஓ திரௌபதி, இப்படிப்பட்ட கோபம் நிலவும் உலகத்தில் பிறப்பு எப்படி ஏற்படும்! உயிர்களின் பிறப்பு சமாதானத்தால் ஏற்படுகிறது என்பதை அறிந்து கொள். மன்னர்களும் கோபத்திற்க்குத் தங்களை ஒப்புக் கொடுத்தால், குடிமக்கள் விரைவில் அழிவைச் சந்திப்பர். ஆகையால், கோபம், மக்களின் அழிவுக்கும் துயரத்திற்கும் காரணமாகும். மன்னிக்கும் தன்மையுடன் பூமியைப் போன்ற பொறுமை கொண்ட மனிதர்கள் உலகத்தில் இருப்பதாலேயே உயிர்கள் செழிப்பையும் வாழ்வையும் பெறுகின்றன. என்ன காயம் ஏற்பட்டாலும் ஒருவன் மன்னிக்க வேண்டும். மனிதன் மன்னிக்கும் தன்மையுடன் இருப்பதாலேயே உயிர்களின் தொடர்ச்சி ஏற்படுகிறது. கோபத்தை வெல்பவனே ஞானி. அவனே பலவான். கோபத்தை வெல்லும் சக்தி படைத்த மனிதன், பல எண்ணற்ற மகிழ்ச்சி நிறைந்த இன்பகரமான உலகங்களுக்கு சொந்தக்காரனாவான். அதேவேளையில் கோபம் கொண்ட மனிதன் முட்டாள் என்று அழைக்கப்பட்டு, இப்பிறப்பிலும் அடுத்த பிறப்பிலும் துன்பத்தைச் சந்திக்கிறான்.

ஓ திரௌபதி, பொறுமை குறித்த இந்த வரிகளைக்கேட்ட பிறகு உனக்குள் உள்ளடங்கு. கோபத்திற்கு ஆளாகாதே. மன்னிப்பும் , மென்மையும் சுயமாக ஒருவன் அடைய வேண்டும். அவர்களின் நித்தியமான தன்மையையே பிரதிபலிக்கிறது. ஆகையால் உண்மையில் நான் அந்தக் குணங்களை என்னிடம் சேர்த்துக் கொள்வேன்.”

இவ்வாறு யுதிஷ்டிரர் திரௌபதிக்கு விளக்குகின்றார். எனவே, நமக்குள்ளேயே இருந்து நம்மை அழித்திடும் ஆறு எதிரிகளில் ஒன்றான "கோபத்தை" அடக்கிக் கொள்வோம். பொறுமையாக இருக்கப் பழகிக் கொள்வோம்.

“அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வாரைப் பொறுத்தல் தலை”
(குறள் 151)

மேலும் படிக்க:

அரிஷத்வர்கம் - http://dharmafacts.blogspot.my/2016/04/blog-post_15.html

Monday 9 May 2016

அக்‌ஷய திரிதியை என்றால் என்ன?



அக்‌ஷய திரிதியை ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத வளர்பிறையின் (சுக்ல பக்‌ஷத்தின்) மூன்றாவது நாள் வரும். ‘அக்‌ஷய’ என்றால் எப்போதும் குறையாதது எனப் பொருள்படும். ’திரிதியை’ என்றால் மூன்றாவது நாள் எனப் பொருள்படும்.

அக்‌ஷய திரிதியையின் முக்கியத்துவம்

அக்‌ஷய திரிதியை நாளன்று தானம் செய்வது மிகவும் நன்மை தரக் கூடிய ஓர் உன்னதமான செயலாகும். இந்துக்கள் கடைப்பிடிக்க வேண்டிய மூன்று நற்செயல்களில் தானமும் ஒன்றாகும். மேலும், அக்‌ஷய திரிதியை நாளன்று அறிவை வளர்க்கும் நல்ல நூல்களைக் கற்க துவங்குவது மிகவும் சிறப்பாகும். உதாரணமாக, வேத உபநிடதங்கள், பகவத் கீதை, திருக்குறள் போன்றவை.

“தானம், தயவு மற்றும் தன்னடக்கம் – இவை மூன்றும் எல்லோரிடமும் இருக்கவேண்டிய மிக முக்கியமான நற்பண்புகள். உன் தேவைக்கு அதிகமானதை தானமாக தந்திடு; ஏழை எளியவர்களிடம் தயவு காட்டு; மனதையும் புலன்களையும் கட்டுப்படுத்தி தன்னடக்கம் கொள்வாயாக.” (யஜுர்வேதம், பிருகதாரண்யக உபநிடதம் 5:3)

சாஸ்திரங்களில் தானம்

மகாபாரதத்தில் அக்‌ஷ்ய திரிதியை நாளின் முக்கியத்துவம் உணர்த்தப்படுகின்றது. உணவு, உடை, பொருள், அறிவு போன்றவற்றை தேவைபடுவோருக்கு தானமாக தரவேண்டும் என்பதை பல கதைகளின் மூலமாக மகாபாரதம் உணர்த்துகின்றது.

பகவான் கிருஷ்ணருக்கு ஆடை தேவைபட்ட போது தக்க சமயத்தில் திரௌபதி தன் ஆடையை தானமாக கொடுத்தாள். அவள் செய்த தானத்தின் பலனாக, துரியோதணனின் சபையில் பகவான் கிருஷ்ணர் திரௌபதிக்கு ஆடை தந்து காத்தருளினார்.

அதேபோல தான், பகவான் கிருஷ்ணரின் நெருங்கிய நண்பரான குசேலரின் கதையும் ஏழ்மையிலும் தானம் புரிவதன் மகத்துவத்தை உணர்த்துகின்றது. தன்னிடமிருந்த ஒருபிடி சோற்றையும் கிருஷ்ணருக்கு தானமாக தந்திட்ட குசேலரின் பரந்த குணமும் நட்புடை நெஞ்சமும் எக்காலமும் போற்றத்தக்கது.

தன் வாழ்க்கையை தானத்திற்காகவே அர்ப்பணித்த கர்ணரின் கதைகளும் ஏராளம் உள்ளன. விறகு கேட்க வந்தவரிடம் தன் வீட்டு தூண்களையே தானமாக தந்தவர்.

அதேபோல புராணத்திலும் ததீசி எனும் முனிவர் தன் முதுகெலும்பை தானமாக தரும் கதையும் அமைந்துள்ளது. இக்கதையின் மூலமாக இந்துக்கள் உடலுறுப்பு தானம் செய்ய ஊக்குவிக்கப்படுகின்றனர்.

அக்‌ஷய திரிதியைக்கு என்ன செய்யலாம்?

அக்‌ஷய திரிதியை நன்னாளன்று நிறைய புண்ய கர்மங்கள் மேற்கொள்ளலாம். ஜபம், தவம், தானம், ஸ்நானம் போன்றவை முக்கியமான புண்ய கர்மங்கள் ஆகும்.

  • ஜபம் - இறைவனின் திருநாமத்தை ஜபம் செய்தல்
  • தவம் – இறைவனை மனத்தில் நிலைநிறுத்தி, ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடித்து விரதமிருத்தல்
  • தானம் – தேவைபடுவோருக்கு உணவு, உடை, பொருள், புத்தகம் போன்றவற்றை தருதல்
  • ஸ்நானம் – தீர்த்த தலங்களுக்கு யாத்திரை சென்று புனித குளியல் மேற்கொள்தல்

நினைவில் கொள்ளவேண்டியது

எப்போதும் நினைவில் கொள்ளுங்கள், தங்கமோ வைரமோ நாளை நம்மோடு வரப் போவதில்லை. உயிர் குடியிருக்கும் இந்த உடல் கூட நமக்கு சொந்தமில்லை என்பதே சத்தியம். எப்போதும் நம்முடன் வருவதெல்லாம் நாம் செய்யும் கர்மங்களே (செயல்களே). ஆகவே, முடிந்தவரை நல்ல செயல்களை மேற்கொள்வோம்.

ஓம் தத் ஸத்

Sunday 8 May 2016

ஜாதி என்றால் என்ன?



ஜாதி என்றால் என்ன என்ற கேள்விக்கு யஜுர்வேத நிராலம்ப உபநிடதத்தில் பதில் தரப்பட்டுள்ளது. நிராலம்ப உபநிடதம், சுக்ல யஜுர்வேதத்தில் அமைந்திருக்கும் முக்திக வகையைச் சேர்ந்த ஓர் உபநிடதமாகும். இந்துதர்மத்தின் உயரிய உண்மைகளின் உறைவிடமாக உபநிடதங்கள் திகழ்கின்றன.

நிராலம்ப உபநிடதம், 22 சாமான்ய உபநிடதங்களில் ஒன்றாகும். இந்த உபநிடதத்தில் ஒரே ஒரு அத்தியாயம் அமைந்துள்ளது. அந்த ஓர் அத்தியாயத்தில் 41 சுலோகங்கள் அமைந்துள்ளன. இந்த 41 சுலோகங்களும் ஒவ்வொரு கேள்விகளாகவும் அதற்கான விடைகளாகவும் அமைந்துள்ளது. உதாரணமாக, பிரம்மம் என்றால் என்ன? தெய்வம் என்றால் என்ன? உயிரினங்கள் என்றால் என்ன? பிரகிருதி (இயற்கை) என்றால் என்ன? பரமாத்மன் என்றால் என்ன? பிரம்மதேவர் யார்? விஷ்ணு யார்? சிவன் யார்? இந்திரன் யார்? யமன் யார்? இதுபோல 41 கேள்விகளும் அதற்கான பதில்களும் அமைந்துள்ளன.

இந்த உபநிடதத்தின் 21-ஆவது சுலோகத்தில், ஜாதி என்றால் என்ன? என்ற கேள்வியும் அதற்கான பதிலும் உள்ளது.

“ஜாதிர் இதி ச ந சர்மனோ ந ரக்தஸ்ய ந மாம்ஸஸ்ய ந சஸ்தின: ந ஜாதிர் ஆத்மனோ ஜாதிர் வ்யாவஹர ப்ரகல்பித” (1-21)

பொருள்:
ஜாதி என்பது உண்மையல்ல. ஒருவனின் தோல், இரத்தம், சதை, எலும்பு ஆகிய யாவும் அழியும் இயல்புடையது. ஆனால் அவனின் நிலையான ஆன்மாவிற்கு அழிவில்லை. அழிவற்ற ஆன்மாவிற்கு ஜாதியுமில்லை.

விளக்கம்:
ஆன்மா ஒன்றுதான் என்று இருக்கையில், அந்த ஆன்மாவிற்கு ஆண் பெண், ஏழை பணக்காரன், உயர்ந்தவன் தாழ்ந்தவன், வெள்ளையன் கறுப்பன், தடித்தவன் மெலிந்தவன் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. ஆகையால், ஜாதி என்றால் பொய்யானது. அது உண்மையல்ல. மனிதர்களிடையே எந்தவொரு வேற்றுமையும் கிடையாது. ‘ஸர்வ பூதேஷு சமஹ்’ எனும் பகவத் கீதையின் சத்தியம் மீண்டும் உணர்த்தப்படுகின்றது.

இவ்வாறு நாம் அறிந்து, புரிந்து, தெளிந்து, அதன்படி நடந்துகொள்ளும்படி நிறைய அரும்பெரும் தத்துவங்கள் உபநிடதங்களில் அடங்கியுள்ளன.

பெண்ணுரிமை காத்த அம்மையார்

பெண்ணுரிமை காத்த அம்மையார்
தரிகொண்டா வேங்கமாம்பா



இறைத்தொண்டில் ஆணுக்கு இருக்கும் அத்தனை உரிமையும் பெண்ணுக்கும் உள்ளது. அந்த உரிமையைக் காக்கவும் உணர்த்தவும் தோன்றியவரே வேங்கமாம்பா அம்மையார்.

தரிகொண்டா வேங்கமாம்பா என்பவர் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த விஷ்ணு பக்தை ஆவார். திருமலை வேங்கடேசன் மீது கொண்ட அளவற்ற பக்தியாலும் அன்பாலும் பல கவிதைகளும் பாடல்களும் இயற்றியுள்ளார். வேங்கமாம்பா எனும் பெயர் கொண்ட இந்த அம்மையார், ஆந்திராவின் தரிகொண்டா எனும் ஊரைச் சேர்ந்தவர். கிருஷ்ணயமத்தியர் மற்றும் மங்கமாம்பா எனும் தம்பதியருக்கு ஒரே தவப் புதல்வியாக பிறந்தார். தன்னுடைய சிறு வயதிலே பகவான் மீது அளவுக்கடந்த பக்தி கொண்டு திகழ்ந்தார். இதனால் சில ஊர்மக்கள் வேங்கமாம்பாவை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று பழிக்கவும் செய்தனர்.

|| இளமைக் காலம் ||

வேங்கமாம்பா, தன்னுடைய இளம் வயதிலே பௌதீகப் பொருள்களின் மீது கொண்டுள்ள பற்றுகளைத் துறந்து எப்போதும் வேதாந்தம் பேசுவதைக் கண்டு அவரின் பெற்றோர்கள் பதற்றம் கொண்டனர். தன்னுடைய ஒரே புதல்வி துறவி ஆவதை அவர்கள் விரும்பவில்லை. ஆதலால் வேங்கமாம்பாவுக்கு வேங்கடாசலபதி எனும் ஒருவரை திருமணம் செய்து வைத்தனர். வேங்கமாம்பாவின் தூய பக்தியையும் அளவற்ற ஆன்மீக ஆற்றலையும் உணர்ந்துகொண்ட வேங்கடாசலபதி தன் மனைவியை தாய்க்கு நிகராகப் போற்றினார். இதனால் வேங்கடாசலபதி வேங்கமாம்பாவிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். ஒருவேளை வேங்கடாசலபதி உயிரிழந்தாலும் வேங்கமாம்பா தன் சுமங்கலித் தன்மையை விட்டுக் கொடுக்க கூடாது என கேட்டுக் கொண்டார். சில நாட்களிலே வேங்கடாசலபதி ஒரு விபத்தில் காலமானார்.

|| பெரும் புரட்சி ||

அக்காலத்தின் மரபுக்கு எதிரான ஒரு பெரும் புரட்சியை வேங்கமாம்பா அம்மையார் ஆரம்பித்தார். ”பூவும் பொட்டும் ஒவ்வொரு பெண்ணின் உரிமை. அதை ஊர்மக்கள் வந்தாலும், அந்த வானுலக தேவர்கள் வந்தாலும் கூட விட்டுக் கொடுக்க மாட்டேன்” என சபதமிட்டார். அதேபோல காலம் முழுவதும் அவர் சுமங்கலியாகவே வாழ்ந்தார். வேங்கமாம்பாவின் குடும்பத்தினரும் வேங்கடாசலபதியின் குடும்பத்தினரும் எப்போதும் வேங்கமாம்பாவுக்கு உறுதுணையாக இருந்தனர். அம்மையார் குருகுலத்தில் சேர்ந்து ஆன்மீக கல்வியைப் பெறுவதற்கு அவரின் உறவினர் உதவி செய்தனர்.

|| யோக சாஸ்திரம் கற்றல் ||

வேங்கமாம்பா அம்மையார், சுப்பிரமணியர் எனும் ஆச்சாரியாரை தன் குருவாக ஏற்றுக் கொண்டு அவரிடம் யோக சாஸ்திரங்களைக் கற்று தேர்ந்தார். வெகு சில நாட்களிலே தலைச்சிறந்த யோகினியாகவும் தேர்ச்சிப் பெற்றார். அதன்பின்னர், திருமலைக்குச் சென்றார். திருமலையில் அண்ணமாச்சாரியாரின் வாரிசுகள் வேங்கமாம்பா அம்மையை வரவேற்றனர். அம்மையாரின் பக்தியையும் அறிவையும் கேட்டுணர்ந்த அவர்கள் அம்மையை போற்றினர்.

|| திருமலை ஆரத்தி ||

வேங்கமாம்பா அம்மையார் ஒவ்வொரு நாளும் கருவறையில் இருக்கும் வேங்கடேச பெருமானுக்கு தான் தொடுத்த துளசி மாலையை அணிவித்து ஆரத்தி எடுப்பார். இதைக் கண்டு பொறுக்காத ஒரு தீட்சிதர் அம்மையின் மீது பெரும்பழி போட்டு அம்மையை கோயிலை விட்டு விரட்டினார். எனினும் வேங்கடேச பெருமான் வேங்கமாம்பா அம்மையை நாடிச் சென்று துளசி மாலையும் ஆரத்தியும் பெற்றார் என கூறப்படுகின்றது. இதனால் ஒவ்வொரு நாளும் பூஜைக்கு முன்னரே திருமலையான் துளசி மாலை அணிந்திருப்பதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். தவறு செய்த தீட்சிதரும் கடும் நோயால் பாதிக்கப்பட்டு தன் தவற்றை ஒப்புக்கொண்டார். அதன்பின்னர் வேங்கமாம்பா அம்மையாரிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் திருமலைக்கு அழைத்து வந்தனர்.

|| ஆறு ஆண்டுகள் தவம் ||

திருமலையில் இருந்து வெளியேற்றப்பட்ட வேங்கமாம்பா அம்மையார் ஆறு ஆண்டுகள் ஹரி நாமம் ஜெபித்து கடும் தவம் புரிந்தார். அம்மையார் திருமலையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தும்புரகோணம் எனும் வனத்தில் வேடர் இன மக்களோடு தங்கியிருந்து தவம் புரிந்ததாக குறிப்புகள் உள்ளன. அக்காலத்தின் மிகச் சிறந்த ஹரி பக்தையாக அம்மையார் திகழ்ந்தார்.

|| படைப்புகள் ||

விஷ்ணு பாரிஜாதம், முக்தி கந்தி விலாசம், ராம பரிணயம், ஸ்ரீ பாகவதம், ஸ்ரீ கிருஷ்ண மஞ்சரி, வசிஷ்ட ராமாயணம், ஸ்ரீ வேங்கடாசல மஹாத்யம், அஷ்டாங்க யோக சாரம் போன்ற அரிய பல நூல்களை வேங்கமாம்பா அம்மையார் இயற்றியுள்ளார்.

|| சேவைகள் ||

அம்மையார் திருமலையில் மூன்று மடங்கள் அமைத்து ஏழைகளுக்கு நீர், உணவு போன்ற அடிப்படை தேவைகளை ஏற்படுத்தி தந்துள்ளார். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதற்கு ஏற்ப திருமலையை சேர்ந்த மக்களுக்கு பல நல்ல உபதேசங்களும் செய்துள்ளார். இப்போதும் திருமலையில், தரிகொண்டா வேங்கமாம்பா அம்மையாரின் பெயரில் அன்னபிரசாத மையம் அமைந்துள்ளது.

|| மறைவு ||

19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் அம்மையார் இறைவனின் திருவடியை அடைந்தார். அம்மையாரின் சமாதி வேங்கடேஸ்வர சுவாமி ஆலயத்தின் அருகே அமைந்துள்ளது. அக்காலக்கட்டத்தில் ஆன்மீகத்திலும் பக்தியிலும் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது என்பதை உணர்த்துவதற்காக வேங்கமாம்பா அம்மையார் பிறவி எடுத்தார் என்று கூறப்படுகின்றது.

~ தத் விஷ்ணோ பரமம் பதம் ~

தாய்மை – இந்துதர்மம்


வலியும் இன்பமும் ஒருசேரும் ஓரிடம், ஒரு குழந்தையை ஈன்றெடுக்கும் தாயிடம். ஒரு பெண் தாய் எனும் மிக உயர்வான ஒரு ஸ்தானத்தை அடையும் போது, தெய்வத்தின் மிக முக்கிய அம்சத்தை பெறுகிறாள். அதுவே, தாய்மை எனும் அம்சம். உலக உயிர்களுக்கெல்லாம் தாய் ஆதி பராசக்தி. ஆனால் ஒவ்வொரு குழந்தைக்கும் கண்கண்ட முதல் தெய்வம், அக்குழந்தையை இவ்வுலகிற்கு தந்த தாய் தான். இதனாலே, யஜுர்வேதம்

“மாத்ரு தேவோ பவ” – தாய் தெய்வத்திற்கு ஒப்பானவள் என கூறுகின்றது. தாயிற் சிறந்த ஒரு கோயிலுமில்லை. ஒருகுழந்தைக்குத் தாயை விட உயர்வான ஒரு சொந்தமும் இல்லை. தாயும் தந்தையுமே ஒவ்வொரு பிள்ளைகளின் முதல் தெய்வம்.


மகாபாரதத்தின் ஷாந்தி பர்வத்தில் பீஷ்மர் கூறுகிறார்:

“ஒருவனுக்கு திருமணமாகி பல குழந்தைகள் இருந்தாலும், அவனுக்கு முதுமைப் பருவம் வந்து விட்டாலும் அவன் தாய்க்கு அவன் எப்போதுமே ஒரு குழந்தை தான். ஒரு தாய்க்கு தன் குழந்தையை விட மிக உயர்ந்த செல்வம் இந்த உலகில் எதுவுமே இல்லை. அவன் எப்படிபட்ட பலமுடையவனாக இருந்தாலும், தாய்க்கு அவன் எப்போதும் செல்லக் குழந்தை தான். தாயைச் சிறந்த ஓர் அடைக்கலம் உலகில் இல்லை. தாயைச் சிறந்த ஓர் அன்புள்ளம் உலகில் இல்லை. தாயை விட வலிமையான பாதுகாப்பு ஒரு குழந்தைக்கு இல்லை. ஒருவனின் ஜனனத்திற்குக் (பிறப்புக்கு) காரணமான தாய் தான் அவனுக்கு ‘ஜனனீ’.”

இராமாயணத்தில் ஸ்ரீராமர் கூறுகிறார்:

“ஜனனீ ஜன்மபூமிஷ் ச ஸ்வர்காதபி கரியஸி” – “தாயும் தாய்நாடும் சொர்க்க லோகங்களை விட மேலானது”.

தாயின் குணங்கள்

தாய் எனும் ஸ்தானம் தான் உலகிலே மிகவும் மேன்மையானதாகும். தாயிடமிருந்து தியாக உணர்வையும் தன்னலமற்ற உள்ளத்தையும் ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ளலாம். தாயின் அன்புக்கு நிலையானது இவ்வுலகில் வேறெதுவும் கிடையாது. தாய் எப்போதுமே தன்னை விட தன் பிள்ளைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பாள். அதுவே அவளின் இயல்பான குணமாகும். தன் பசி, தாகம், தூக்கம், வலி எதையுமே பெரிதாக அவள் கருதுவதில்லை. மாறாக குழந்தையின் பசி, தாகம், தூக்கம், வலி அனைத்துமே அவளை வருத்தும்.

தாய்க்கு நன்றி செலுத்துவோம்

இவ்வளவு அரிய பல தியாகங்கள் செய்த தாய்க்கு நம்மால் நன்றிகடன் என்ன செய்ய முடியும்? திருவள்ளுவர் கூறுகிறார், ஒரு தாய் தன் குழந்தையைப் பெற்றெடுக்கும் போது அனுபவித்த இன்பத்தை விட அக்குழந்தை வளர்ந்து பெரியவனாகி மற்றவர் போற்றும் சிறந்தவனாக ஆகும் போதும் பலமடங்கு இன்பத்தைப் பெறுவாள். எனவே, சமுதாயத்தில் ஒரு சிறந்த மனிதனாக இருந்து தாய்க்கு நம்மால் முடிந்த மகிழ்ச்சியையும் மனதிருப்தியையும் அளிக்க வேண்டும். இதுவே ஒரு தாய்க்கு மக்கள் (பிள்ளைகள்) ஆற்றவேண்டிய புத்திர-தர்மம்.

பெண்கள் மதிப்பிற்கு உரியவர்கள்

தாய் மட்டுமல்ல, எல்லாப் பெண்களுமே மரியாதைக்கு உரியவர்கள். ஓர் ஆண் மற்றப் பெண்களை தாயாகவும், தங்கையாகவும், தன் மகளாகவும் கருத வேண்டும் என்பது ஆணின் முக்கிய தர்மமாகும். இறுதியாக,

”எங்கே பெண்களுக்கு தக்க மரியாதையும் மதிப்பும் தரப்படுகின்றதோ, அங்கே தெய்வங்கள் மகிழ்ச்சி அடைகின்றன. எங்கே பெண்களுக்கு அவமரியாதையும் அவமதிப்பும் மட்டுமே கிடைக்கின்றதோ, அங்கே எந்த நன்மையும் நிகழாமல் போகின்றன.” (மகாபாரதம் 13:45:5)

ஓம் தத் ஸத்