Followers

Monday 29 February 2016

பகவத் கீதை




பிறப்பால் யாவரும் சமமே!


எல்லா மனிதர்களும் தாயின் கருவறையில் தான் தோன்றி பிறக்கின்றனர். எல்லா மனிதர்களும் ஒரே மாதிரி தான் உடலமைப்பையும் கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கையில் மனிதர்களிடையே வேறுபாடுகள் எங்கிருந்து வருகின்றன? பிறப்பாலா? கிடையாது. ஒருவனின் குணம் மற்றும் செயல் தான் அவனை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றது.

மற்றபடி பிறக்கும் போதே ஒருவன் இப்படித்தான் ஆவான் என்று நிர்ணயிக்கப்படுவதில்லை. விதி என்பதை நாம் தவறாகப் புரிந்து கொண்டுள்ளோம். விதி என்பது விதிக்கப்பட்டது எனப் பொருள்படாது. விதி என்றால் ‘நம்முடைய செயல்களால் நம்முடைய பாதையை நாமே வகுத்துக் கொள்வது’. தற்போது நாம் அனுபவிக்கும் இன்பமும் துன்பமும் நம்முடைய முந்தைய செயல்களின் பலன்களே. அதுபோல நம்முடைய தற்போதைய செயல்கள் வருங்காலத்தில் நாம் அனுபவிக்கப் போகும் பலன்களை விதிக்கின்றன.

நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்குக் கடவுளைப் பழித்துக் கொள்வது தவறாகும். ஏனென்றால் இன்பமும் துன்பமும் பிறர் தர வாரா. இன்று நாம் விதைக்கும் நற்செயல் என்ற விதையே நாளை மரமாகி நற்பயன் என்ற இனிப்பான கனியைத் தரும். அதுபோல இன்று நாம் விதைக்கும் தீயசெயல் என்ற விதையே நாளை மரமாகி தீயபயன் என்ற கசப்பான கனியைத் தரும்.

ஆகையால் நம்முடைய செயல்களை நாம் திருத்திக் கொள்ளவேண்டும். எந்த சமயமும் தர்மத்துக்குப் புறம்பான செயல்களைச் செய்யக் கூடாது. தர்மமுடைய செயல்களையே செய்யவேண்டும். எது தர்மமுடைய செயல்? எது தர்மத்துக்கு புறம்பான செயல்? இதனை அறிவதற்கு நாம் அறநூல்களை நாடவேண்டும். நம்மிடம் இருக்கும் தலைச்சிறந்த ஓர் அறநூல் ‘திருக்குறள்’. திருக்குறள் ஒரு தர்மசாஸ்திரம். திருக்குறளைப் பின்பற்றி வாழ்தலே தர்மமுடைய வாழ்க்கையாகும்.

”அறத்தான் வருவதே இன்பம்; மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.” (குறள் 39)

தர்மநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். தர்மத்துக்குப் புறம்பாக வாழ்வதால் துன்பங்களே வந்துசேரும். தர்மநெறிக்கு புறம்பான வாழ்க்கையால் ஒருவனுக்கு எந்தவொரு புகழுமில்லை.

யார் அந்தணர்?

யார் அந்தணர்?





”அறம்புரி அருமறை நவின்ற நாவின்திறம்புரி கொள்கை அந்தணர்”-ஐங்குறுநூறு 387


மேற்காணும் பாடல் சங்க இலக்கியமான ஐங்குறுநூற்றில் இருந்து எடுக்கப்பட்டது. இப்பாடலின் பொருள்: “அறத்தைப் (தர்மத்தை) போற்றும் நான்மறை வேதங்களின்படி நடந்து பிறருக்கு நன்மைகள் செய்பவரே அந்தணர்.”
இதேபோல திருக்குறளிலும்,

“அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்”.
-திருக்குறள் 30


பொருள்: எல்லா உயிர்களையும் சமம் என்பதை உணர்ந்து எல்லாவுயிர்களிடமும் கலங்கமற்ற கருணையைக் காட்டும் தர்மநெறி உடையவரே அந்தணர் ஆவார்.

|| ஆறு தொழில்களை உடையவர் ||

”அந்தணர் ஆவோர் அறுதொழில் பூண்டு உளோர்”
–திருமந்திரம்
“அறுதொழிலோர்” –திருக்குறள் 560
அந்தணர்கள் அறுதொழிலோர் என்று அழைக்கப்படுகின்றனர். அந்தணர்களுக்கு ஆறு தொழில்கள் உள்ளன. அவை:
1) வேதங்களைக் கற்றல்,
2) வேதங்களை மற்றவர்களுக்குக் கற்று தருதல்,
3) முறையான வழிபாட்டில் ஈடுபடுதல்,
4) மற்றவர்களுக்கு முறையான வழிபாட்டு முறையைக் கற்றுத் தருதல்,
5) தர்மநெறியில் நடத்தல்,
6) மற்றவர்களுக்குத் தர்மநெறியைப் புகட்டுதல்.

|| அறவோரே அந்தணர் ||

ஒரு பிராமணன் பிறப்பிக்கப்படுவதில்லை, அவன் பயில்விக்கப்படுகிறான். ஒரு மருத்துவ தந்தைக்குப் பிறந்தவன் மருத்துவனாகி விட இயலாது. அவனின் தந்தையிடம் இருந்து முறையான பயிற்சி பெற்றால் அவன் மருத்துவன் ஆகலாம். அதேபோல தான் அந்தணருக்குப் பிறந்தவன் பயிற்சியில்லாமல் அந்தணர் ஆகிவிட இயலாது. ஒரு பிராமணன் முறையான வழிகாட்டலினால் மட்டுமே உருவாக்கப்படுகின்றான். அப்படி உருவாகியவர்களே வால்மீகியும் வியாசரும். ஒருவன் முறையான ஒழுக்கங்களையும் நெறிகளையும் கடைப்பிடித்து சரியான ஆன்மிகப் பயிற்சிகள் எடுத்துக் கொண்டால் அவன் பிராமண நிலையை அடையலாம்.
ஒருவனின் செயல்களும் குணங்களும் தான் அவனின் தரத்தை பகுத்துக் காட்டுகின்றன. அதேபோல் பிராமண நிலையை அடைய கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கநெறிகளை பகவத் கீதை 18:42-இல் நாம் காணலாம். பெரும்பாலும் கோவிலில் பூஜை செய்யும் பூசாரி தான் பிராமணர் என்று நாம் கருதுகிறோம். ஆனால் அது உண்மையல்ல. பூசாரி (பூஜை செய்யும் ஆசாரியர்) என்பவர் கோவில்களில் தெய்வங்களுக்கு பூஜை மேற்கொள்ளும் ஒழுக்கநெறியுள்ள ஒருவர். ஆனால் பிராமணர் என்பது பரம்பொருளான இறைவனை உணர்ந்த ஒருவர். அவ்வாறு இறைவனை உணர்ந்த அரும்பெரும் ரிஷிகளே வேதங்களை நமக்கு அருளினர். அதேபோல எந்தவகையான மனிதராக இருந்தாலும் முறையான பயிற்சிகளை எடுத்துக் கொண்டால் அவரும் பிராமண நிலையை அடையலாம். பிராமண நிலை என்பது எல்லோரை விடவும் பெரிய பதவி என்று பொருள்படாது. உலக மக்களுக்கு நல்லறிவையும் நல்லொழுக்கத்தையும் புகட்ட தகுதியுடையவனாக்கும்.

|| ரிக்வேதம் ||



ரிக்வேதத்தின் புருஷ சூக்தம் அண்ட சராசரத்தின் இயல்பை நுணுக்கமான முறையில் ’உருவக அணி’யில் விவரிக்கின்றது. புருஷ சூக்தத்தில், “புருஷர்களின் வாயாக இருப்பது யார்?” என்று கேட்கப்படுகின்றது. புருஷர்கள் என்றால் மனிதர்கள் எனப் பொருள்படும். மனிதர்களின் வாயாக இருந்து அவர்களுக்கு நல்லொழுக்கத்தையும் நல்லறிவையும் புகட்டுபவர்கள் அந்தணர்கள் என்று அடுத்த வரியில் சொல்லப்படுகின்றது.
வாய் என்பது அறிவைப் புகட்டும் கருவியாக சித்தரிக்கப்படுகின்றது. ஒரு மனித சமுதாயத்திற்கு நல்லறிவும் நல்லொழுக்கமும் இல்லாவிட்டால் அந்த சமுதாயத்தின் நிலை திசைமாறி போய்விடும். எனவே ஒவ்வொரு சமுதாயத்திலும் நல்லவறைப் புகட்டும் சான்றோர்கள் ஒரு கணிசமான எண்ணிக்கையில் இருக்கவேண்டும்.

|| உண்மையை அறிவோம் ||



சில பேருக்கு இதை அந்த இறைவனே வந்து சொன்னாலும் புரியாது. உலக மாயைகளில் ஒன்றான ’பிடிவாதத்தினால்’ உண்மைகளை ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள். ‘அசதோ மா சத் கமய’ எனும் மந்திரம் ‘உண்மையில்லாதவற்றிலிருந்து எம்மை நீக்கி உண்மையானவற்றிற்கு வழிகாட்டுவாயாக’ என்று இறைவனிடம் பிரார்த்தணை செய்துகொள்ளும் மந்திரமாகும். நம்முடைய பிறவியின் நோக்கமே எது உண்மையோ அதை அறிவதற்கு தான். பொய் கௌரவத்தினாலும் விடாபிடியான பிடிவாதத்தினாலும் உண்மையில்லாதவற்றை நம்பிக் கொண்டு நம்மை நாமே அறியாமை எனும் சிறையில் அடைத்து தண்டித்துக் கொள்ளக் கூடாது. உண்மை என்று அறிந்தவுடன் அதை ஏற்றுக் கொள்ள நிறைவான பக்குவத்தை நாம் கொண்டிருக்க வேண்டும். இறைவனின் அளவற்ற திருவருளைப் பெற நல்லொரு வழி இதுவே ஆகும்.

Wednesday 24 February 2016

உலகத்தின் மிகப் பெரிய 15 இந்து ஆலயங்கள்

உலகத்தின் மிகப்பெரிய 15 இந்து ஆலயங்கள்


1. அங்கோர் வாட், கம்போடியா

(820,000 சதுர மீட்டர் பரப்பளவு)



2. ஸ்ரீ ரங்கநாதசுவாமி திருக்கோயில்,
திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு
(631,000 சதுர மீட்டர் பரப்பளவு)





3. அக்‌ஷர்தம் திருக்கோயில், டெல்லி
(240,000 சதுர மீட்டர் பரப்பளவு)



4. தில்லை நடராஜர் திருக்கோயில்,

சிதம்பரம், தமிழ்நாடு

(160,000 சதுர மீட்டர் பரப்பளவு)





5. பிரகதீசுவரர் திருக்கோயில்,

தஞ்சாவூர், தமிழ்நாடு

(102,400 சதுர மீட்டர் பரப்பளவு)



6. அண்ணாமலையார் திருக்கோயில்,

திருவண்ணாமலை, தமிழ்நாடு

(101,171 சதுர மீட்டர் பரப்பளவு)


7. ஏகாம்பரேசுவரர் திருக்கோயில்,

காஞ்சிபுரம், தமிழ்நாடு

(92,860 சதுர மீட்டர் பரப்பளவு)




8. வரதராஜ பெருமாள் திருக்கோயில்,

காஞ்சிபுரம், தமிழ்நாடு

(81,000 சதுர மீட்டர் பரப்பளவு)





9. ஜம்புகேசுவரர் திருக்கோயில்,

திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு

(72,843 சதுர மீட்டர் பரப்பளவு)


10. நெல்லையப்பர் திருக்கோயில்,

திருநெல்வெலி, தமிழ்நாடு

(71,000 சதுர மீட்டர் பரப்பளவு)



11. மீனாட்சியம்மன் திருக்கோயில்,

மதுரை, தமிழ்நாடு

(70,050 சதுர மீட்டர் பரப்பளவு)




12. வைதீசுவரன் திருக்கோயில்,

தமிழ்நாடு

(60,780 சதுர மீட்டர் பரப்பளவு)







13. தியாகராஜசுவாமி திருக்கோயில்,

திருவாயூர், தமிழ்நாடு

(55,080 சதுர மீட்டர் பரப்பளவு)





14. ஜகநாதர் திருக்கோயில்,
புரி, ஒடிஸா
(37,000 சதுர மீட்டர் பரப்பளவு)



15. லட்சுமிநாராயணன் திருக்கோயில்,
டெல்லி
(30,000 சதுர மீட்டர் பரப்பளவு)


Monday 22 February 2016

இந்தோனேசியாவின் விநாயகர் தீவு


இந்தோனேசியாவின் விநாயகர் தீவு




இந்தோனேசியாவின் பாலித் தீவிற்கு அருகாமையில் ‘மெஞ்சாங்கன்’ எனும் ஓர் அழகிய குட்டித் தீவு அமைந்துள்ளது. இந்த தீவிற்கு ‘கணேஷர் தீவு’ என்ற இன்னொரு பெயரும் உள்ளது. அதற்கு காரணம் இந்த தீவில் அமைந்திருக்கும் பிரம்மாண்டமான விநாயகர் திருக்கோயில் தான். இந்தோனேசியாவின் மிகப் பழைமையான இந்துகோவில்களில் இதுவும் ஒன்றாகும். சுமார் 2000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த திருக்கோயில்.



இந்த தீவில் மொத்தம் எட்டு கோவில்கள் உள்ளன. அவற்றுள் சேகர கிரி தர்ம காஞ்சன ஆலயம் மிகவும் புகழ்ப்பெற்றது. தற்போது இந்த தீவில் மனிதர்கள் வாழவில்லை என்றாலும் தினந்தோறும் இந்துக்கள் இந்த தீவின் கோவில்களைத் தரிசித்து வழிபாடு மேற்கொள்கின்றனர். இந்த தீவில் அமைந்திருக்கும் திருக்கோயில் மிகவும் சக்திவாய்ந்த கோயில் என நம்பப்படுகின்றது. இந்தோனேசியாவின் பல பயங்கர எரிமலை தாக்குதல்கள் மற்றும் நிலநடுக்கங்கள் ஆகியவற்றையும் மீறி இக்கோயில் நிலைத்து நிற்கின்றது. இந்த தீவிற்கு அருகாமையில் ‘லெத்கொல் விஸ்ணு’ எனப்படும் ஒரு விமான நிலையமும் அமைந்துள்ளது.




மேலும் கோவிலின் சிற்பங்களும் பல அரிய பொக்கிஷங்களும் கடலுக்குள் மூழ்கி கிடக்கின்றன. இவை ‘அண்டர்வாட்டர் டெம்பல்’ எனவும் அழைக்கப்படுகின்றன. கடல் நீர்மட்ட உயர்வால் இத்தீவின் கரையோர பகுதிகளில் இருந்த ஒருசில கோவில்கள் தற்போது நீருக்குள் மூழ்கிவிட்டன.



தீவின் கோவில்களில் இந்துதர்மத்தைச் சார்ந்த பெரிய திருவுருவங்களும் அமைந்துள்ளன.











முக்கியமான சமய திருநாட்களில் இந்தோனேசியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான இந்துதர்ம பெருமக்கள் இத்தீவின் கோவில்களுக்குப் புனித யாத்திரை மேற்கொள்வர்.

பெற்றோரை தோளில் சுமந்த மகன்

பெற்றோரை தோளில் சுமந்த மகன்




சிரவண குமார் இராமாயணத்தில் இடம்பெறும் சிறப்புமிக்கவர்களில் ஒருவராக திகழ்கிறார். பெற்றோருக்கு ஆற்றவேண்டிய நன்றிக்கு வித்தாக சிரவண குமார் காட்டப்படுகிறார். இவர் தசரத மன்னராட்சியில் அயோத்தியில் வாழ்ந்தவர்.
சாந்தாவன் மற்றும் ஞானவதி எனும் கண்பார்வையற்ற ஏழை தம்பதியரின் மகன் சிரவண குமார். இவர் வயது முதிர்ந்த கண்பார்வையற்ற தன் பெற்றோருக்கு வாழ்க்கை ஆதாரமாக விளங்கியவர். இந்துதர்மத்தைப் பொறுத்தவரை இந்துக்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது தீர்த்த யாத்திரை மேற்கொள்வது முக்கிய கடமையாகும். எனவே சிரவணனின் பெற்றோரும் தீர்த்த யாத்திரை மேற்கொள்ள முடிவெடுத்தனர். ஆனால் கண்பார்வையற்ற நிலையில், வறுமையும் முதுமையும் சேர்ந்திருக்க அவர்களால் தங்களின் கடமையை நிறைவேற்ற இயலாமல் போனது.

தன் பெற்றோரின் நல்லாசைகளை நிறைவேற்ற வேண்டியது ஒரு பிள்ளையின் கடமையாகும். ஆயினும் பெற்றோரை தீர்த்த யாத்திரைக்கு அனுப்ப போதுமான பணம் சிரவணனிடமும் இல்லை. எனவே அவர் தன் தாய் தந்தையரை இரு வலுவான கூடைகளில் அமர்த்தி ஒரு மூங்கிலால் இணைத்து தன் தோள்பட்டையில் தாங்கிகொண்டு (காவடியைப் போல்) தீர்த்த யாத்திரை மேற்கொண்டார்.

தீர்த்த யாத்திரை பயணத்தின் போது தம் பெற்றோர் சிரவணனை தாகம் காரணமாக குடிநீர் கொண்டுவர பணித்தனர். சிரவணனும் ஆற்றங்கரை அருகில் சென்று ஒரு பெட்டகத்தில் நீரை எடுத்துக் கொண்டிருந்தார். அச்சமயம் துல்லிய செவியுணர்வு கொண்ட தசரத சக்கிரவர்த்தி அங்கு வேட்டையாட வந்திருந்தார். நீர் பெட்டகத்தில் நிறையும் ஒலி கேட்டு மான் ஒன்று நீர் அருந்த வந்திருக்கும் என்று நினைத்து அந்த திக்கை நோக்கி அம்பெய்தார். பெற்றோர் தாகம் தீர்க்க தண்ணீர் எடுக்கச் சென்ற சிரவணன் தசரதரின் அம்பு தாக்கி கீழே விழுந்தார். தன்னுடைய கவனக்குறைவால் தான் இளைத்த பெரும்பாவ செயலை எண்ணி தசரதர் துடிதுடித்துப் போனார். வேகமாக ஓடிச்சென்று சிரவணனிடம் மன்னிப்பு கேட்டு மன்றாடினார்.

உயிர்போகும் தருவாயிலும் தன் தாய்தந்தையரின் தாகம் தீர்க்க வேண்டும் என்ற ஓர் எண்ணம் மட்டுமே சிரவணனின் மனத்தில் ஓடிக் கொண்டிருந்தது. தசரதரிடம் தன் பெற்றோரின் தாகத்தை தீர்க்க இந்த தண்ணீரைக் கொண்டுசென்று தரும்படி வேண்டினார். நீர் பெட்டகத்தை தசரதரிடம் தர சிரவணனின் உயிரும் உடலை விட்டு நீங்கியது. தசரதர் தன் கண்ணீரை துடைத்தபடியே தாங்கமுடியாத மனவேதனையுடன் நீர்பெட்டகத்தை எடுத்துக் கொண்டு சிரவணனின் பெற்றோரை நோக்கிச் சென்றார்.

அங்கு தசரதர் அவர்களின் தாகத்தை தணித்துவிட்டு நடந்தவற்றை எல்லாம் அவர்களுக்குத் தெரிவித்தார். தன்னுடைய கவனக்குறைவால் அவர்களுடைய மகனின் மீது அம்பெய்தி கொன்றுவிட்டதைக் கூறி அவர்களிடம் மன்னிப்பு கோரி மன்றாடினார். ஆயினும் தசரதரின் மீது கடுங்கோபம் கொண்ட சிரவணனின் பெற்றோர் தசரதனுக்கு விமோஷனமே இல்லா ஒரு மிகப்பெரிய சாபத்தை அளித்தனர்.

“இன்று நாங்கள் எங்களின் மகனைப் பிரிந்து அனுபவிக்கும் வேதனையைப் போலவே நீயும் உன் மகனைப் பிரிந்து புத்திரசோகத்தை அனுபவிப்பாய்!” என சாபமளித்தனர். தசரதர் இளைத்த கர்மவினை பலனாலும் அவர் பெற்ற சாபத்தாலும் அன்புமகன் ஸ்ரீராமரை பதிநான்கு ஆண்டுகள் பிரிந்து புத்திரசோகம் அனுபவித்து உயிரிழந்தார்.

இராமாயணத்தின் ஒவ்வொரு கதாபத்திரமும் ஒவ்வொரு சிறப்பை உடையவர் போல சிரவணன் கடமைமிக்க ஒரு மகனாக போற்றப்படுகின்றார். தன் உயிர்போகும் தருவாயிலும் தன் பெற்றோருக்கு ஆற்றவேண்டிய கடமையை அவர் மறக்கவில்லை. ஆனால் இன்றைய காலத்தில் சில பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் கொண்டுசென்று சேர்க்கின்றனர். தன் பெற்றோரை முதுமை காலத்தில் கூட இருந்து பாதுகாப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு பிள்ளையின் கடமையாகும். இதுவே புத்திர தர்மம் என்று சொல்லப்படுகின்றது.

“மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்” (குறள் 70)

Saturday 20 February 2016

பதஞ்சலி யோக சூத்திரம் தமிழில் - அறிமுகம்


பதஞ்சலியின் யோக சூத்திரம் – தமிழாக்கம்



|| அறிமுகம் ||


சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் பதஞ்சலி முனிவர் அருளிய அருமை பெருமை வாய்ந்த அரிய நூல் தான்
பதஞ்சலி யோக சூத்திரம்”. ஏற்கனவே பல்லாயிர ஆண்டுகாலம் மரபில் இருந்துவந்த யோக கலை மற்றும் யோகசாஸ்திர நூல்களை அடிப்படையாக கொண்டு பதஞ்சலி இந்த நூலை அருளினார். பதஞ்சலியின் யோக சூத்திரம் கர்ம யோகம் மற்றும் அஷ்டாங்க யோகம் ஆகிய இரண்டைப் பற்றியும் விளக்குகின்றது. இந்த சூத்திரம் நான்கு படலங்களும் 196 சூத்திரங்களும் உடையதாகும். பதஞ்சலி பதினெண் சித்தர்களுள் ஒருவராகவும் ஆதிசேஷனின் திருபிறப்பாகவும் திகழ்கிறார்.


|| நான்கு படலங்கள் ||


பதஞ்சலியின் யோக சூத்திரம் நான்கு படலங்களாக அமைந்துள்ளது.


  1. சமாதி படலம் – 51 சூத்திரங்கள்
  2. சாதனா படலம் – 55 சூத்திரங்கள்
  3. விபூதி படலம் – 56 சூத்திரங்கள்
  4. கைவல்யா படலம் – 34 சூத்திரங்கள்


|| சிறப்பு ||


பல்லாயிரம் ஆண்டுகளாக வழிவழியாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த யோக முறைகளை முறையாக வகுத்து தொகுத்து அளித்துள்ளது தான் பதஞ்சலி யோக சூத்திரத்தின் முக்கிய சிறப்பாகும். பதஞ்சலியின் யோக சூத்திரம் உலக மக்கள் அனைவரின் நன்மைக்காகவும் அருளப்ட்டதாகும். ஈஸ்வரனின் திருவருளால் பதஞ்சலி இந்த அரிய நூலை அளித்துள்ளார். இந்துதர்மத்தின் நான்கு யோகங்களான பக்தி யோகம், கர்ம யோகம், அஷ்டாங்க யோகம் மற்றும் ஞான யோகம் ஆகியவற்றில் கர்ம யோகம் மற்றும் அஷ்டாங்க யோகம் ஆகிய இரண்டைப் பற்றியும் இந்த நூல் விளக்குவதால் இது கர்மயோக மற்றும் அஷ்டாங்க யோக மரபினருக்கு அடிப்படை நூலாக திகழ்கின்றது. நான்கு யோகங்களில் அஷ்டாங்க யோகம் தனித்த சிறப்புடைய காரணத்தால் ‘ராஜயோகம்என்று அறியப்படுகின்றது.

இந்துக்கள் மேற்கொள்ளவேண்டிய ஐந்து யாகங்கள்

இந்துக்கள் மேற்கொள்ள வேண்டிய ஐந்து யாகங்கள்



எல்லா இந்துக்களும் மேற்கொள்ள வேண்டிய யாகங்கள்

யாகம் என்பதை யஜ்ஞம் அல்லது வேள்வி என்று குறிப்பிடுவர். யாகம் என்றால் தியாகம், வழிபாடு, கொடுத்தல் அல்லது மரியாதை செலுத்துதல் எனப் பொருள்படும். பொதுவாக யாகங்கள் என்பது அக்கினி குண்டத்தில் நெய் முதலிய பொருட்களை இட்டு மந்திரங்கள் உச்சரித்தல் ஆகும். ஆனால் சாந்தோக்கிய உபநிடதம் இவ்வாறு கூறுகின்றது,
”உண்மையில் யாகம் என்று சொல்லப்படுவது யாதெனில் தூய அறிவும் ஒழுக்கநெறியும் உடைய மனிதனின் வாழ்க்கைமுறை தான்.” (சாந்தோக்கியம் 8.5.1)

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் ஒழுக்கநெறியுடனும் தூய்மையான அறிவுடனும் வாழ்தலே ஒரு யாகம் தான் என்று சொல்லப்படுகின்றது. இது எல்லா இந்துக்களும் அவசியம் மேற்கொள்ள வேண்டிய யாகமாக அமைந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக இந்துக்கள் மேற்கொள்ள வேண்டிய ஐந்து முக்கிய யாகங்கள் அமைந்துள்ளன. அவை பஞ்ச மகா யஜ்ஞங்கள் என்றழைக்கப்படுகின்றன. இதைப் பற்றி கிருஷ்ண யஜுர்வேதம் 2.10-இல் குறிப்பிடப்பட்டுள்ளது. (யஜ்ஞம்=யாகம்)

1) பிரம்ம யாகம்
= பகவத் கீதை, திருக்குறள் போன்ற நல்ல நூல்களைக் கற்றல், நல்லறிவை வளர்த்துக் கொள்தல், தன்னுடைய நிலையை மேம்படுத்திக் கொள்தல், மற்றவர்களுக்கு நல்லறிவைக் கற்றுத் தருதல். இது மிகவும் முக்கியமான யாகமாகும்.

2) தேவ யாகம்
= தினமும் ஒருவேளையாவது தியானத்தில் ஈடுபட வேண்டும். தெய்வங்களுக்கு நன்றி கூறும் விதமாக வழிபாட்டில் ஈடுபட வேண்டும். கோவில்களுக்குச் சென்று வழிபட வேண்டும்.

3) பித்ரு யாகம்
= முன்னோர்களுக்கு நன்றி கூறும் விதமாகவும் அவர்களை நினைவுகூறும் வகையிலும் அவர்களுக்கு தர்ப்பனம்/நினைவு நாள் மேற்கொள்ள வேண்டும். மேலும் முன்னோர்கள் சொன்ன நல்லச் சொற்களையும் அவர்கள் வகுத்து தந்த நல்வழியையும் கடைப்பிடிக்க வேண்டும்.

4) மனுஷ்ய யாகம்
= சக மனிதர்களை சமமாக நோக்கவேண்டும். மனிதர்களிடம் கருணை காட்டவேண்டும். தேவைபடும் மனிதர்களுக்கு உதவ வேண்டும். பசித்தவருக்கு உணவு தரவேண்டும்.

5) பூத யாகம்
= பூதம் என்றால் இயற்கைவாழிகள் எனப் பொருள்படும். இயற்கையையும் இயற்கை அன்னையின் இதர குழந்தைகளையும் அன்போடு பராமரிக்க வேண்டும். இயற்கை அன்னைக்கு நன்றி கூறும் விதமாக மிருகங்களுக்கு உணவளிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

இந்துக்கள் இந்த ஐந்து யாகங்களையும் மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றனர். இந்த ஐந்து யாகங்களும் மிக உயர்வான மற்றும் தலைசிறந்த யாகங்கள் ஆகும். இதை மேற்கொள்ள அக்கினி குண்டமோ அல்லது நெய்யோ தேவைபடாது மாறாக நல்ல மனம் தான் தேவைபடும். அதுதானே இந்த காலத்தில் கிடைப்பதற்கு அரிதான ஒன்று. அத்தகு கிடைப்பதற்கு அரிதான ஒன்றைக் கொண்டு இறைவனைப் பூஜிப்போம். நல்பேறு அடைவோம். ஓம்

Sunday 14 February 2016

அதிக சுலோகங்களைக் கொண்ட புராணம்



மகாபுராணங்கள் பதினெட்டு ஆகும். அவற்றுள் அதிக ஸ்லோகங்களைக் கொண்டதும், மிக நீளமானதும் கந்தபுராணமாகும். முருகப் பெருமானைப் பற்றிய குறிப்புகளும், முருகப்பெருமானின் லீலைகளைப் பற்றியும், இந்துக்களின் புனித தளங்களைப் பற்றிய குறிப்புகளும், பாரத தேசத்தின் பல்வேறு இடங்களைப் பற்றிய தகவல்களும் இந்த புராணத்தில் விளக்கப்பட்டுள்ளன. மேலும், சிவபெருமானைப் பற்றிய குறிப்புகளும் இந்த புராணத்தில் உள்ளன.

கச்சியப்பர் அவர்கள் கந்தபுராணத்தை தமிழில் வெளியிட்டார். கந்தபுராணத்தில் மொத்தம் 7 கண்டங்கள் உள்ளன. அவை மஹேஸ்வர கண்டம், விஷ்ணு கண்டம், பிரம்ம கண்டம், காசி கண்டம், ஆவந்திய கண்டம், நகர கண்டம், பிரபாச கண்டம்.

சமுத்ர மந்தன், தாரகாசுர வதம், மஹிஷாசுர வதம், நவதுர்கைகள், ஜோதிலிங்க தலங்கள், திரிசங்கு-விஷ்வாமித்ரர் கதை, பத்மாவதி கதை போன்றவைகள் கந்தபுராணத்தில் இடம்பெறும் தகவல்களில் முக்கியமானவை ஆகும்.

முருகப்பெருமானுக்கு கந்தன் (ஸ்கந்தன்), கார்த்திகேயன், குமாரஸ்வாமி, சுப்ரமணியர், சேயோன், வேலன், சரவணன், செந்தில், தண்டபாணி, ஷண்முகன், குகன் என்ற பலப் பெயர்கள் உள்ளன. முருகப்பெருமான் தேவர்களின் சேனாதிபதியும், பார்வதிசிவனின் மகனும் ஆவார்.

Saturday 13 February 2016

குருசேத்திர போரில் உணவுகொடுத்த தமிழன்



உதியன் சேரலாதன் எனும் சேர மன்னன், குருஷேத்ர போரில் பாண்டவ-கௌரவ படைகளைச் சேர்ந்த போராளிகளுக்கு உணவு வழங்கியதால் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் என்று புறநானூற்றில் போற்றப்படுகிறார்.

உதியன் சேரலாதன், சோழ மன்னரான கரிகால சோழனைப் போல் புகழ்ப்பெற்றவர் ஆவார்.

”அலங்குளைப் புரவி யைவரொடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்” (புறநானூறு பாடல் 2)

பொருள்:
நீ, அசைந்த தலையாட்டமணிந்த குதிரையையுடைய பாண்டவர் ஐவருடனே சினந்து நிலத்தைத் தம்மிடத்தே கொண்ட பொற்பூந்தும்பையையுடைய துரியோதனன் முதலாகிய நூற்றுவரும்பொருது போர்க்களத்தின் கட்படுந்துணையும் பெருஞ்சோறாகிய மிக்க உணவை இருபடைக்கும் வரையாது வழங்கினோய்!

இந்த புறநானூற்றுப் பாடல், பண்டைய காலத்திலே தென்பாரதமும் வடபாரதமும் எவ்வளவு ஒற்றுமையாகவும் அன்புடனும் இருந்தனர் என்பதைக் காட்டுகின்றது. அதுமட்டுமல்லாமல், மகாபாரதத்தில் பாண்டிய மன்னர்களும் சோழ மன்னர்களும் பாண்டவர்களோடு சேர்ந்து கௌரவர்களை எதிர்த்துப் போரிட்டனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாண்டவர்களின் வம்சாவழியினரே பாண்டியர்கள் என்ற கருத்தும் மிகப் பரவலாக நிலவுகின்றது.

Friday 12 February 2016

தாய்லாந்து அரசு சின்னம் கருடன்



தாய்லாந்து மொழியில், ‘பிராக்ருத்பஹ’ என்றால் கருட வாகனம் எனப் பொருள்படும். கருட சின்னம் தாய்லாந்து அரசின் அதிகாரப்பூர்வ சின்னமாக பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. 1911-ஆம் ஆண்டு, வஜ்ராவுத் எனும் அரசரால் கருடச் சின்னம் தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

மேலும், தாய்லாந்து அரசு சின்னமாக இதர மூன்று சின்னங்களும் இருந்து வருகின்றன. அவை மஹா ஓங்க்கான் (சிவ முத்திரை), ஐராபொத் (ஐராவத முத்திரை), ஹங்ஸாபிமன் (பிரஹ்மாவின் அன்னமுத்திரை). தாய்லாந்தில் சிவனை பிரா ஈசுவான் என்றும், விஷ்ணுவை பிரா நாரா என்றும், பிரம்மாவை பிராபரம் என்றும் அழைப்பர். தாய்லாந்தின் அரசு, தாய்லாந்தின் பூர்வீக கலாச்சாரங்களையும் பழக்கவழக்கஙளையும் நன்முறையில் பேணிக் காத்துவருகின்றது.

Thursday 11 February 2016

ஏழு முறை இடிக்கப்பட்ட சிவனாலயம்




சிவபெருமானின் 12 ஜோதிலிங்கங்களில் ஒன்றான சோம்நாத் ஆலயம் குஜராத்தில் அமைந்துள்ளது. இதுவே ஜோதிலிங்கங்களில் முதன்மையானது ஆகும். இங்கு சிவபெருமான் சோம்நாதராக எழுந்தருளுகிறார். இங்குதான் ஸ்ரீகிருஷ்ணர் தனது அவதாரத்தை முடித்துக் கொண்டு திரும்பியதாகவும் கூறப்படுகிறது.

இது அழிவற்ற ஆலயம் என அறியப்படுகிறது. இதற்கு காரணம் இந்த ஆலயம் கடந்த 1000 ஆண்டுகளில் பல முறை முஸ்லீம்களால் அழிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும், இந்து மன்னர்கள் இந்த ஆலயத்தை திருப்பி கட்டினர். இந்த ஆலயம் சுமார் 5000 ஆண்டுகள் பழைமையானது. ஆயினும், 649-ஆம் ஆண்டு வல்லபி அரசர்கள் இக்கோவிலைப் புதுப்பித்து மேம்படுத்திக் கட்டினர்.

749-ஆம் ஆண்டில் குஜராத்தையும் ராஜஸ்தானையும் படையெடுத்து வந்து தாக்கிய அல்-ஜுனாய்த் சோம்நாத் ஆலயத்தை இடித்து, பலரைக் கொன்று குவித்தான். 815ஆம் ஆண்டில், இரண்டாம் நாகபத்தா சோம்நாத் ஆலயத்தை மீண்டும் கட்டினார். 997-ஆம் ஆண்டில் சாலுக்ய அரசர் முலாராஜா மேம்படுத்தினார்.

1024-ஆம் ஆண்டில், மஹ்முட் கஸ்னி என்பவனால் இந்த ஆலயம் இடிக்கப்பட்டது. முதலாம் பீம்தேவா எனப்படும் அரசர் இக்கோவிலை 1026 முதல் 1042 ஆண்டுக்குள் மீண்டும் கட்டினார்.

மீண்டும் ஒருமுறை இஸ்லாமிய படையெடுப்பில் இந்த ஆலயம் இடிக்கப்பட்டது. குமாரப்பல் எனப்படும் அரசர் மீண்டும் இக்கோவிலை 1172ஆம் ஆண்டு கட்டி முடித்தார்.

1296-இல் அலாவுதின் கில்ஜியின் படையெடுப்பில் இந்த ஆலயம் இடிக்கப்பட்டது. அப்போது ”மதமாற மறுத்த 50,000 இந்துக்களை வெட்டிக் கொன்றேன், மேலும் 20,000 பேரையும் எண்ணற்ற ஆடுமாடுகளையும் அடிமைகளாக்கினேன்” என்று அலாவுதின் கில்ஜி மார்தட்டிக் கொண்டான் என தஜ்-உல்-மாஸிர் எனும் அவனுடைய வரலாற்றுச் சுவடு குறிக்கின்றது. மஹிபலா தேவ எனப்படும் அரசரால் 1308ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

1375-ஆம் ஆண்டு, முசபர் ஷா எனப்படுபவனால் இந்த ஆலயம் தாக்கப்பட்டு, இடிக்கப்பட்டது. எனினும், இந்துக்கள் மீண்டும் இக்கோவிலைக் கட்டினர்.

1451-ஆம் ஆண்டு, மஹ்முத் பெகாடா எனப்படுபவனால் இந்த ஆலயம் மீண்டும் தாக்கப்பட்டது. இவன் இந்த ஆலயத்தின் சந்தனகட்டை கதவுகளையும், விலையுயர்ந்த பல பொருட்களையும் களவாடி சென்றான். எனினும், இந்துக்கள் இக்கோவிலை மீண்டும் கட்டினர்.

மீண்டும் ஒருமுறை, 1665-ஆம் ஆண்டு அவுரங்கசெப் எனப்படும் முஸ்லீம் அராஜகாரனால் அழிக்கப்பட்டது. 1783-ஆம் ஆண்டு இந்த ஆலயம் நாக்பூர் அரசர் மற்றும் இதர அரச அரசிகளின் உதவியோடு மீண்டும் கட்டப்பட்டது. அதோடு முஸ்லீம் அராஜகம் ஓரளவு ஓய்ந்து, பிரிட்டீஷ் அராஜகம் வந்தது.

சுதந்திரத்திற்குப் பின்னர், சோம்நாத் ஆலயம் புதுப்பிக்கப்பட்டது. இன்று சோம்நாத் ஆலயம், 8.2 மீட்டர் உயர கோபுரத்தில் இந்துதர்ம காவி கொடியுடன் காட்சியளிக்கின்றது. கோவிலின் சிகரம் 15 மீட்டர் உயரமுடையது.

Wednesday 10 February 2016

அறுவை சிகிச்சையின் தந்தை சுஷ்ருதா




சுஷ்ருதா என்பவர் 2600 ஆண்டுகளுக்கு முந்தையவர். இவரின் அரிய படைப்பு ‘சுஷ்ருதா சம்ஹிதம்’ என அறியபடுகின்றது. இப்படைப்பு அறுவை சிகிச்சையைப் பற்றிய மிக துல்லியமான படைப்பாகும். இதனாலே சுஷ்ருதா ‘அறுவை சிகிச்சையின் தந்தை’ என அழைக்கப்படுகிறார்.

ஆயுர்வேதாவைச் சேர்ந்த மிகமுக்கிய மூன்று நூல்களில் ஒன்றுதான் சுஷ்ருதா சம்ஹிதம். 184 அத்தியாயங்களைக் கொண்ட இந்த சம்ஹிதத்தில் 1120 வகையான நோய்களும், 700 மூலிகைகளும்,64 வகையான கனிமங்களும், 57 வகையான விலங்கியல் மருந்துகளும் குறிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்ஹிதத்தில் சுஷ்ருதா ஆழமான, நுணுக்கமான அறுவை சிகிச்சைகளைப் பற்றி மிக தெளிவாக விளக்குகியுள்ளார். சொத்தைப்பல் நீக்கம், மூலம் சிகிச்சை, குடல்சார்ந்த சிகிச்சைகள், பாலின உறுப்பு சார்ந்த சிகிச்சைகள், எலும்பு முறிவு சிகிச்சைகள் போன்ற பலவகையான சிகிச்சைகளும் குறிக்கப்பட்டுள்ளன. மனித எலும்புகளின் வகைகளும் அதன் விளக்கங்களும் கூட குறிக்கப்பட்டுள்ளன. மேலும், கண் சார்ந்த கோளாறுகள் பற்றியும் அதற்கான சிகிச்சைகளும் பற்றிய குறிக்கப்பட்டுள்ளன.

எட்டாம் நூற்றாண்டில் இந்த நூல் “கிதாப் இ சுஷ்ருத்’ என்ற பெயரில் அரபுமொழிக்கு மொழிப்பெயர்க்கப்பட்டது.

Tuesday 9 February 2016

தமிழ் இலக்கியங்களைக் காப்பாற்றியவர்




பல வீட்டு உத்திரங்களில், கறையானுக்கு விருந்தாக விருந்த அரிய தமிழ்ச் சுவடிகளை மீட்டு இன்று உலகமக்கள் யாவர்க்கும் விருந்தாய் படைத்துவிட்டவர் உ.வே. சுவாமிநாதர். இவர் கும்பக்கோணத்தில் பிப்ரவரி 19, 1855-இல் பிறந்தார். தமிழர்கள் இவரை ‘தமிழ்த் தாத்தா’ என்று பாசமாக அழைப்பர்.

தமிழ்த் தாத்தா அவர்கள் சுமார் 91 தமிழ் நூல்களைப் பதிப்பித்துள்ளார். அவற்றுள் பெரும்பாலானவை தமிழ் இலக்கியத்தோடு தொடர்புடையவை. மேலும், 3067 தமிழ் ஓலைச்சுவடிகளை மீட்டெடுத்து, அவற்றைப் பதிப்பித்தார். மஹாவித்வான் மீனாக்ஷி சுந்தரம் என்பவரிடம் இவர் தமிழை உயிர்க்கு ஒப்பாகப் போற்றி பயின்றார். தமிழ்த் தாத்தா அவர்களின் தமிழ்ப் பற்று காரணமாக, தன்னுடைய வாழ்வினை தமிழ் ஓலைச்சுவடிகளை மீட்டெடுப்பதற்காக அர்ப்பணித்துக் கொண்டார்.


சுவாமிநாத ஐயர், ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று அவர்கள் வீட்டில் பராமரித்து வைக்கப்பட்டிருந்த தமிழ் ஓலைச்சுவடிகளை மீட்டார். பலர் வீட்டின் பேழைகளிலும், பொருள்வைக்கும் அறைகளிலும் தூசு படிந்து இருளில் கிடந்த ஓலைச்சுவடிகளை மீட்டெடுத்தார். அவற்றுள் சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகியவையும் அடங்கும். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கல்லூரி முதல்வராக இருந்த இவர், ஓலைச்சுவடிகளைச் சேகரிப்பதற்காக தன்னுடைய முழுநேரத்தை அர்ப்பணிக்க முடிவு செய்து தன்னுடைய பணியையும் இராஜினாமா செய்தார்.


போக்குவரத்து வசதிகள் இல்லாத காலக்கட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் கால்நடையாகவும் கட்டைவண்டியிலும் பல கிலோ மீட்டர்கள் பயணித்து தமிழ் இலக்கியங்களை மீட்டு தமிழர் என்ற அடையாளத்துக்கு வித்திட்டவர், உ.வே. சுவாமிநாத ஐயர் அவர்கள். ஆனாலும், பிராம்மண துவேஷத்தில் சிக்குண்டு தவிக்கும் தமிழர்கள் இவர்போன்ற தியாகிகளை மறந்துவிட்டனர். மாறாக, தமிழைக் காட்டுமிராண்டி என்றுசொல்லி இகழ்ந்த கொடியவனின் புகழை வசைப்பாடி திரிகின்றனர்.

Monday 8 February 2016

உபவேதங்கள் என்பவை எவை?



உபவேதங்கள் என்பவை எவை?

நான்மறை எனப்படும் ரிக், சாம, யஜுர், அதர்வண வேதங்களைப் பற்றி நாம் பரவலாக அறிந்திருக்கிறோம். ஆனால் உபவேதங்களைப் பற்றி நாம் அறிந்திருக்கிறோமா? இந்துதர்மத்தின் இரண்டாம் தர வகை நூல்கள் ஸ்மிரிதி நூல்கள் என்றழைக்கப்படுகின்றன. உபவேதங்கள் என்பவை ஸ்மிருதி வகை நூல்களைச் சேர்ந்தவை. உபவேதங்கள் நான்கு ஆகும். அவை:
1) தனுர் வேதம் (போர் அறிவியல்)
2) காந்தர்வ வேதம் (கலை அறிவியல்)
3) ஆயுர் வேதம் (மருத்துவ அறிவியல்)
*4) ஸ்தபத்ய வேதம் (கட்டட அறிவியல்)
*5) அர்த்த சாஸ்திரம் (அரசியல் மற்றும் பொருளாதார அறிவு)

*சில வேளைகளில் ஸ்தபத்ய வேதத்துக்குப் பதிலாக அர்த்தசாஸ்திர நூல் உபவேதங்களுள் சேர்க்கப்படும்.
1) தனுர் வேதம் தனுர் என்றால் வில்; வேதம் என்றால் அறிவு
தனுர்வேதம் என்பது தற்காப்புக் கலை மற்றும் போர்க்கலை சம்பந்தப்பட்ட வேதகால அறிவியலாகும். தனுர்வேதம் ரிக்வேதத்துடன் தொடர்புடையது. தனுர்வேதத்தின் பல குறிப்புகள் இந்துதர்ம நூல்களில் அமைந்துள்ளன. இந்துதர்ம நூல்கள் பலவகையான போர்க் கலைகளை கொண்டுள்ளன. ஆயுதமேந்திய மற்றும் ஆயுதமற்ற என இருவகையில் இவை அமைந்துள்ளன. தன்னைத் தற்காத்துக் கொள்வதும் தீயன செய்வோரிடமிருந்து நல்லவர்களைக் காத்தலும் இந்துதர்மத்தின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.

ஆயுதமின்றி நடத்தப்படும் மோதல் மல்யுத்தம் என்றழைக்கப்படுகின்றது. முட்டிக்காலால் எதிரியின் நெஞ்சத்தை தாக்குதல், தலையில் பலமாக குத்துதல், தலைப் பிடித்துக் கவிழ்த்து முதுகில் முட்டிக்கையால் தாக்குதல், கையால் கழுத்தை மறித்துக் கொண்டு எதிரியை வீழ்த்துதல் என சில வகை ஆயுதமில்லா சண்டைக் கலைகள் மகாபாரதத்தில் விளக்கப்படுகின்றன. இவ்வாறு இருவருக்கு இடையே நடக்கும் மோதல் முதல் இரு படையினருக்கு இடையே நடக்கும் மோதல் வரை விளக்கப்படுகின்றது. ஜரசந்தனுக்கும் பீமனுக்கும் இடையேயான மல்யுத்தம் 27 நாட்கள் நீடித்தன.

அக்கினி புராணத்தில் அமைந்திருக்கும் தனுர்வேத குறிப்புகள் அளப்பரியது. ரத கஜ துராக பதாதிஎன போராளிகளை தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை மற்றும் ஆள்படை என நான்காக பகுத்து ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே பல நுணுக்கங்கள் கற்றுத் தரப்படுகின்றன.

பண்டைய காலங்களில் அரசர்களும் வீரர்களும் தனுர்வேதத்தில் தேர்ந்தவர்களாக இருந்தனர். பின்னர் முஸ்லீம் படையெடுப்பால் அனைத்து மக்களும் தற்காப்புக் கலைகளை கற்றுக் கொள்ள ஆரம்பித்தனர். மல்யுத்தம், தேரோட்டும் போட்டி, குதிரை ஓட்டும் போட்டி, வில்போட்டி, வலிமையான விலங்கை அடக்குதல் என சில புகழ்ப்பெற்ற வீர விளையாட்டுகளும் வேதங்களிலும் இதிகாசங்களிலும் விளக்கப்படுகின்றன. இத்தகைய வீரவிளையாட்டுகள் பெரும்பாலும் சுயம்வரங்களிலும் முக்கிய திருவிழாக்களிலும் நடத்தப்பட்டன.

புறநானூற்றுப் பாடல்கள் வேல், வாள், கேடயம், வில், சிலம்பம் போன்ற ஆயுதங்களையும் அதன் பயன்பாட்டையும் விளக்குகின்றன. அதுமட்டுமல்லாமல் சுஷ்ருதா சம்ஹிதை எனும் நூலில் மனிதனின் உடலில் இருக்கும் 107 முக்கிய இடங்களில் எந்தெந்த இடங்களில் தாக்கினால் என்னென்ன நிகழும் என்பதையும் குறிப்பிட்டுள்ளனர். இது வர்மக்கலையுடன் தொடர்புடையது.

பிரிட்டிஷ் வருகைக்குப் பின் களரிபயிற்று, சிலம்பம் போன்ற தற்காப்புக் கலைகள் தடை செய்யப்பட்டன. நம்மவர்கள் வீரமின்றி எந்தவொரு தற்காப்புக் கலை அறிவுமின்றி இருப்பது பிரிட்டிஷ் காரர்கள் நம்மை அடிமைப்படுத்த எளிதாக இருக்கும் என்பதற்காக அவ்வாறு செய்தனர். அதற்கு ஏற்றாற்போலவே தற்போது இக்கலைகள் மக்களிடையே மறக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

2) காந்தர்வ வேதம் காந்தர்வ என்றால் கலை எனப் பொருள்படும்.
காந்தர்வ வேதம் நாடகம், நடனம், இசை போன்ற அறிவியலைச் சார்ந்தது. இது சாமவேதத்தின் உபவேதமாகும். காந்தர்வ வேதத்தின் அடிப்படையில் உருவானதே நாட்டிய சாஸ்திரம். நாட்டிய சாஸ்திரத்தை இயற்றியவர் பரதமுனி. இது 6000 ஸ்லோகங்களை உடையது. காந்தர்வ வேதம் 36,000 ஸ்லோகங்களைக் கொண்டது. காந்தர்வ வேதம் இயற்கையில் சமநிலை உண்டாக்கவும் உலகினில் அமைதியும் சாந்தமும் நிலவவும் இயற்றப்பட்டதாக அதன் உள்ளடக்கம் உரைக்கின்றது. பலவகையான இசைக் கருவிகள் மற்றும் இசை சம்பந்தப்பட்ட பல அரிய தகவல்களும் காந்தர்வ வேதத்தில் உள்ளது.
3) ஆயுர்வேதம் - ஆயுர் என்னும் சொல் நீண்ட வாழ்வு என்பதையும், வேதம் என்பது கல்வி அல்லது அறிவுத்துறை என்று பொருள்படக்கூடியது. ஆயுர்வேதம் என்பது மருத்துவ துறை சார்ந்த கல்வியாகும். நீண்டகால வரலாறு கொண்ட இம்மருத்துவ முறை தெற்காசிய நாடுகளில் மிகவும் புகழ்ப் பெற்ற ஒரு மருத்துவ முறை. இந்திய மருத்துவ நடைமுறைகள் குறித்த மிகப் பழைய நூல்கள் வேதகாலத்தில்தோன்றின. சுஸ்ருத சம்கிதை, சரக சம்கிதை என்பன அக்காலத்துக்கு உரிய முக்கியமான மருத்துவ நூல்கள். தொடர்ந்து வந்த காலங்களில், ஆயுர்வேத மருத்துவர்கள், பல்வேறு நோய்களைக் குணமாக்குவதற்கான மருந்துகளையும், அறுவை மருத்துவ முறைகளையும் உருவாக்கியுள்ளனர். திருமாலின் அவதாரமாக கருதப்படும் தன்வந்திரிக்கு மருந்துகளுக்கும், உடல் மற்றும் மனநலத்துக்கும் இறைவனாவான். ருத்ரன் தேவர்களின் மருத்துவனாகப் பேசப்படுகிறான். தேக ஆரோக்கியத்தையும் உயிரோட்டத்தின் ஒழுங்கையும் காப்பதில் அஸ்வினிகளுக்கு முக்கிய பங்குள்ளது.
சரகர், சுஸ்ருதர் மற்றும் வாக்பட்டர் ஆகிய முனிவர்கள் ஆயுர்வேத மருத்துவமுறையின் தலைசிறந்து விளங்கியவர்கள். சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களுக்கு, ஆயுர் வேதத்தில் வாதம், பித்தம், கபம் என்ற மூன்று குணங்கள் இணையாகக் கூறப்படுகின்றது. வாதம் உடல் நலத்தை சமன்படுத்துவதுடன் ஏனைய இரண்டின் உந்துவிசையாகவும் இருக்கிறது. பித்தம் உடலுக்கு வெம்மையளித்து இயக்குகிறது. கபம் ஜடத்தன்மை கொண்டது. ஆயுர்வேதத்தின் அங்கங்கள்:
  1. சல்யம்- அறுவை சிகிச்சை, மகப்பேறு
  2. சாலக்யம்- கண், காது, மூக்கு என்று தலையில் உள்ள உறுப்புகளுக்கு சிகிச்சையளித்தல்
  3. காய சிகிச்சை- உடல் உபாதைகளை மருந்துகள் கொண்டு குணப்படுத்துதல்
  4. பூதவித்யை- மன நலம் பேணுதல்
  5. குமார பிரியா- குழந்தை வளர்ப்பு
  6. அக்தம் – முறிமருந்துகள் அளித்தல்
  7. இரசாயன தந்திரம் – ஆயுள் நீட்டிப்புகான மருந்துகளைப் பயன்படுத்துதல்
  8. வாஜீகரணம்- புத்துயிர்ப்பு மருத்துவம்




4) ஸ்தபத்ய வேதம் – ஸ்தபத்ய என்றால் ‘ஸ்தாபித்தல்
அதாவது நிலைநாட்டுதல் எனப் பொருள்படும். எனவே ஸ்தபத்ய வேதம் என்பதை ‘நிலைநாட்டல் அறிவுஎன மொழிப்பெயர்க்கலாம். ஸ்தபத்ய வேதம் என்பது கட்டடக் கலை சார்ந்த அறிவுத்துறையாகும். இது இயற்கையோடு இசைந்த வகையில் கட்டடங்கள் எழுப்பும் நுட்பத்தை துல்லியமாக பகர்கின்றது. நம்முடைய பாரத தேசத்தின் பண்டைய சில கோவில்கள் ஸ்தபத்ய வேத அடிப்படையில் எழுப்பப்பட்டவை. குறிப்பாக, மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில் மிக நுட்பமான முறையில் எழுந்தருளப்பட்டுள்ளது. இக்கோவில்களின் நுட்பமான அமைப்புமுறையே பூரணமான உள்ளமகிழ்ச்சியை அளிக்கவல்லது.

ஸ்தபத்ய வேதத்தின் சில குறிப்புகள் இன்றைய நவீன கட்டட நிபுணர்களை மெய்சிலிர்க்க வைக்கின்றன.
ஒரு கட்டடம் இயற்கை மற்றும் பிரபஞ்ச செயல்பாடுகளோடு தொடர்பில் இருத்தல் மிக அவசியமாகும். பிரபஞ்ச செயல்பாடுகளோடு ஒத்திசையில் அமைந்திருக்கும் கட்டடம் அதில் குடியிருக்கும் மனிதனுக்கு இயற்கைக்கும் உண்டான பந்தத்தை அதிகரிக்கின்றதுஎன்று கூறப்பட்டுள்ளது.

ஸ்தபத்ய வேதம் இன்றைய வாஸ்து சாஸ்திரத்தோடு நிறைய தொடர்புடையது. ஆயினும் இன்றைய நிலையில் நிறைய வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் இதை தவறாக உபயோகிக்கின்றனர். ஸ்தபத்ய வேதத்தில் ஒரு வீட்டின் வாசல் கிழக்கு நோக்கி இருத்தல் சிறப்பு என்று கூறப்பட்டுள்ளது. காலை கதிரவனின் ஒளி உடலுக்கு விட்டமின் ‘டி
உயிர்ச்சத்துகளை தரவல்லது. ஆகையால், ஒரு வீட்டின் வாசல் கிழக்குநோக்கி இருத்தல் சிறப்பு என்று கூறப்பட்டுள்ளது.

இதுபோல பிரபஞ்ச செயல்பாடுகளோடு தொடர்புடைய வகையில் கட்டடங்கள் எழுப்பும் வழிமுறைகளை ஸ்தபத்ய வேதம் குறிப்பிடுகின்றது. பண்டைய காலத்திலே ஒரு வீட்டை எப்படி கட்டவேண்டும், கட்டிய பின் அதற்குள் என்னவென்ன நுட்பங்களை மேற்கொள்ள வேண்டும் என துல்லியமாக விளக்கியுள்ளது ஸ்தபத்ய வேதம்.



5) அர்த்தசாஸ்திரம் அர்த்தம் என்றால் பொருள் எனப் பொருள்படும். அர்த்தசாஸ்திரம் என்றால் பொருள் சார்ந்த நூல் எனப் பொருள் கொள்ளலாம். தற்போது இந்த நூல் ஆங்கிலத்தில் மொழிப் பெயர்க்கப்பட்டு அரசியல் அறிவியல்என்று பெயர் கொள்ளப்படுகின்றது. அர்த்தசாஸ்திரம் என்பது பண்டைய பாரத நூலாகும். அது அரசாட்சி முறை, பொருளாதாரக் கொள்கை மற்றும் இராணுவ செயல்தந்திரம் போன்றவற்றைப் பற்றிக் கூறுகிறது. அதன் ஆசிரியராக கௌதில்யர், விசுணுகுப்தர் என பல பெயர்களைக் கொண்ட சாணக்கியர் விளங்குகிறார். சாணக்கியர் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். அவர் முதலில் தட்சசீல பல்கலைகழகத்தில் ஓர் அறிஞராக இருந்தார். பின்னர் மௌரியப் பேரரசின் பிரதமராகப் பதவி வகித்தார்.

அர்த்தசாஸ்திரம் 15 புத்தகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது:
  1. ஒழுங்கு முறைப் பற்றி
  2. அரசு கண்காணிப்பாளர்களின் கடமைகள்
  3. சட்டம் பற்றி
  4. தொல்லைகளைக் களைவது
  5. அரசவையினரின் நடத்தை
  6. தனியுரிமை அரசுகளின் தோற்றுவாய்
  7. ஆறு வழிமுறைக் கொள்கையின் முடிவு (அயல் நாட்டு உறவு)
  8. குற்றங்கள் மற்றும் இன்னல்கள் குறித்து
  9. டையெடுப்பவரின் செயல்பாடு
  10. போருடன் தொடர்புடையவை
  11. கூட்டவைகளின் நடத்தை
  12. சக்திவாய்ந்த பகைவனைக் குறித்து
  13. கோட்டையைக் கைப்பற்றுவது குறித்த போர்த்தந்திர வழிமுறைகள்
  14. இரகசிய வழிமுறைகள்
  15. ஒரு நூலை எழுதுவதற்கானத் திட்டம்


அர்த்தசாஸ்திரம் ஒழுக்கமுடைய நாட்டின் தலைவன் ஒருவன் எப்படி இருக்கவேண்டும் என குறிப்பிடுகின்றது:
  • மாற்றான் மனைவியினரின் உறவை விலக்க வேண்டும்.
  • மாற்றானின் சொத்திற்கு துராசைக் கொள்ளக் கூடாது.
  • அகிம்சையைக் கடைபிடிக்க வேண்டும் (அப்பாவி உயிரினங்களிடம் வன்முறையைக் கைக் கொள்ளாமை).
  • பகல் கனவு காணல், மனம் போன போக்கில் செயல்படுவது, வஞ்சகம் மற்றும் ஊதாரித்தனம் ஆகியவற்றைத் தவிர்த்தல்
  • தீங்கிழைக்கும் நபர்களுடன் இணைதலைத் தவிர்த்தல் மற்றும் தீங்கான செயல்களில் ஈடுபடலைத் தவிர்த்தல் ஆகியவற்றைக் கொண்டவன் ஆவான்.


இதுபோல மேலும் பல நுட்பமான விஷயங்களை அர்த்த சாஸ்திர நூல் உள்ளடக்கியது.

மலேசியாவின் பழைய இந்துகோவில்



மலேசியாவில் ஏராளமான இந்துகோவில்கள் அமைந்துள்ளன. அவற்றுள் மிகவும் பழைமையானது என்றால், கடாரத்தில் சிதைந்த நிலையில் அமைந்திருக்கும் புஜங்க பள்ளத்தாக்கு ஆகும். எனினும், இன்னமும் செயல்பட்டு வரும் பழைமையான கோவில் என்றால், அது மலாக்கா மாநிலத்தில் அமைந்திருக்கும் ‘ ஸ்ரீ பொய்யாத மூர்த்தி ஆலயம்’ ஆகும்.

பண்டைய காலத்தில், மலாக்கா மாநிலத்தில் அதிகமான நெல்லிமரங்கள் காணப்பட்ட்து. சமஸ்கிருதமொழியில் ‘அம்லா’ என்றால் நெல்லியைக் குறிக்கும். மலாக்காவை ஆண்ட ‘பரமேஸ்வரா’ எனும் இந்து அரசர் அதற்கு ‘அம்லாக்கா’ எனும் பெயரை இட்டார். அதுவே நாளடைவில், மலாக்கா எனும் பெயராக மருவியது.

18ஆம் நூற்றாண்டில், மலாக்கா மாநிலத்தை டச்சுக்காரர்கள் (நெதர்லாந்து) ஆண்டனர். அக்காலக்கட்டத்தில், இந்த கோவிலை தவிநாயகர் எனும் தமிழர் கட்டினார். இந்தக் கோவிலை ஸ்ரீவிநாயகப் பெருமானுக்காக கட்டினார். இக்கோவிலில் முருகப்பெருமானின் சன்னதியும் உண்டு.

இந்தக் கோவிலில் தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், கன்னி பொங்கல், தீபாவளி, மார்கழித் திங்கள், ஆயுதபூஜை, சிவராத்திரி, ஏகாதசி, அம்மன் திருவிழா, தைப்பூசம், மாசிமகம், தமிழ்ப் புத்தாண்டு, சித்திரை திருவிழா, பங்குனி உத்திரம், ஆடி திருவிழா, விநாயகர் சதுர்த்தி மேலும் இதர இந்து விழாக்களும் விசேஷமானவை.

இக்கோவிலின் தேர்கள் 200 ஆண்டுகள் பழைமையானவை. மரக்கட்டையால் உருவாக்கப்பட்ட இத்தேர்கள், மிக எழிலான சிற்பங்களோடு காட்சியளிக்கும். திருவிழாக் காலங்களில் இறைவன் தேர்களில் வண்ண விளக்குகளோடு ஊர்வலம் வரும் காட்சி எல்லோர் மனதையும் பக்தி மழையில் நனையச்செய்யும்.

Sunday 7 February 2016

அங்கோர்வாட்டில் டைனசார்




அங்கோர் வாட் கம்போடியாவில் அமைந்திருக்கும் உலகிலேயே மிகப் பெரிய ஆலயமாகும். கம்போடியாவின் இந்து ராஜ்ஜியமான கிமேர் ராஜ்ஜியத்தைச் சேர்ந்த, இரண்டாம் சூர்யவர்மன் (பரமவிஷ்ணுலோகன்) எனும் அரசர் இந்த ஆலயத்தை கிமேர் ராஜ்ஜியத்தின் தலைநகரான யசோதாபுரத்தில் கட்டினார். அங்கோர்வாட் ஸ்ரீவிஷ்ணுவுக்காக கட்டப்பட்டதாகும். தற்போது கம்போடிய தேசியகொடியின் சின்னமாக அங்கோர்வாட் திகழ்கின்றது.



இந்துதர்மத்தின் இயற்பெயர் சனாதன தர்மமாகும். சனாதன தர்மம் என்றால் அழிவற்ற பிரபஞ்சநியதி எனப் பொருள்படும். எப்போதுமே இருந்துகொண்டிருந்த, இருக்கவேண்டிய தர்மங்களை நம்முடைய ரிஷிகளும் முனிவர்களும் தங்களின் தவோபலத்தால், அவற்றை உணர்ந்து உலகிற்குச் சொன்னார்கள். பிரபஞ்சம் எப்படி தோன்றியிருக்க கூடும் என்று ரிக்வேதம் 10.129 குறிக்கின்றது, இந்த கோட்பாடு இன்றைய நவீன அறிவியல் உலகத்தை வியக்கவைக்கின்றது. அந்தவகையில், பலகோடி ஆண்டுகளுக்கு முன் இந்த பூமி கிரகத்தில் டைனசார்கள் எனப்படும் இராட்சத பல்லிகள் வாழ்ந்தன என்பதையும் நம்முடைய முன்னோர்கள் உணர்ந்திருக்க கூடும்.


பொதுவாக கோவில் சிற்பங்களில் விநோதமான விலங்குகளின் உருவங்களை நாம் காணலாம். அந்தவகையில், அங்கோர்வாட்டின் சிற்பங்களில் இந்த ’டைனசார்’ எல்லோருடைய கவனத்தையும் அதிகம் ஈர்த்தது. இந்தவகை டைனசார் அறிவியல்ரீதியில் (stegosaurus) என அறியபடுகின்றன. டைனசார்கள் வாழ்ந்தன என்பதையே 1800’ஆ, ஆண்டுகளில் தான் அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். அதற்கு முன்பு உலகின் வேறு எந்த நாகரீகமும், சமயமும் டைனசார்களைப் பற்றிய குறிப்புகளைக் கொண்டிருக்கவில்லை. இப்படி இருக்கையில், 1000ஆம் ஆண்டுகளைச் சேர்ந்த உலகின் மிகப் பெரிய கோவிலில் டைனசாரின் சிற்பம் இருப்பது வியப்பான ஒரு விஷயம் தான்.