Followers

Saturday 21 January 2017

மண்டோதரியின் அறிவுரை

யார் இந்த மண்டோதரி?





மண்டோதரி, இராமாயண இதிகாசத்தில் இடம்பெறும் ஒரு கதாபாத்திரம். இவள் இலங்கையை ஆண்ட இராவணனின் மனைவி, இலங்கையின் இராணி. மண்டோதரி என்றால் ‘மென்மையான இடையுடையவள்’ எனப் பொருள்படும்.

இராமாயணத்தின் குறிப்புகளின் படி, மண்டோதரி மிகவும் அழகானவள்; தூய பக்தியுடையவள்; நேர்மையானவள். இவள் பஞ்ச-கன்யர்களின் ஒருவளாக குறிப்பிடப்படுகிறாள். சதா சர்வ காலமும் தன் கணவனுக்கு நல்ல அறிவுரைகளைக் கூறி, நல்வழிக்குக் கொண்டு வர மண்டோதரி அரும்பாடு பட்டிருக்கிறாள். தன் மனைவியின் நல்புத்தியைக் கேட்காத இராவணன், தனக்கு தானே அழிவைத் தேடிக் கொண்டான்.

|| மண்டோதரியின் பிறப்பு

இராமாயணத்தின் உத்தர காண்டத்தின் படி, மண்டோதரி மாயாசுரனின் வளர்ப்பு மகள். மாயாசுரன், கஷ்யப்ப முனிவரின் மகன். மாயாசுரனுக்கு துந்துபி மற்றும் மாயாவி என்ற இரண்டு மகன்களும் இருந்தனர்.

|| மண்டோதரியின் திருமணம்

மாயாசுரனின் இல்லத்திற்கு வருகை புரிந்த இராவணன், மாயாசுரனின் வளர்ப்பு மகளான மண்டோதரியின் மீது காதல் கொண்டான். வேதமுறைபடி, அக்கினியை ஏழுமுறை வலம் வந்து இராவணன் மண்டோதரியை திருமணம் புரிந்து கொண்டான் என இராமாயணம் குறிப்பிடுகின்றது.

இராஜஸ்தானின் ஜோத்பூரில் அமைந்திருக்கும் மண்டூர் எனும் பட்டணம், மண்டோதரியின் பிறப்பிடமாகும். நெடுங்காலமாக இங்கு வாழும் பிராஃமின் மக்கள் இராவணனை தங்களின் மருமகனாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த இடத்தில் இராவணனுக்கென ஒரு கோயில் (நினைவிடம்) அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

|| மண்டோதரியின் காதல்

மண்டோதரி இராவணனின் மீது மிகுந்த காதல் கொண்டவள். அவள் தன் கணவனின் வீரத்தையும் வலிமையும் கண்டு பெருமை கொண்டாள். தன் கணவன் மற்றப் பெண்கள் மீது ஈர்ப்பு கொள்வதைப் பற்றியும் மண்டோதரி நன்கு அறிந்திருந்தாள். தர்ம பத்தினியாக திகழ்ந்த மண்டோதரி, தன் கணவனுக்கு தர்மத்தை எடுத்துக் கூறி, மனைவியை தவிர மற்ற பெண்ணை தீண்டக் கூடாது எனவும் அறிவுரை செய்தாள். எனினும் இராவணன் அவளின் அறிவுரையைப் பொருட்படுத்தாமல், அவளை நிராகரித்தான்.

|| சீதையைக் காத்த மண்டோதரி

சீதையை அபகரித்து வந்த இராவணன, தன் இச்சைக்கு இணங்க அவளை துன்புறுத்தினான். ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் அவளைத் தீண்டினால் தலை வெடித்து மரணமடைவான் என இராவணனுக்கு சாபம் இருந்தது. இதனால் சீதையை சம்மதிக்க வைக்க அவளை பலமுறை துன்புறுத்தினான். எனினும் சீதை ஒருபோதும் இராவணனின் இச்சைக்கு இணங்கவில்லை. ஒரு சமயம் மிகுந்த கோபமடைந்த இராவணன் சீதையின் தலையைத் துண்டிக்க தன் வாளை உயர்த்தினான். அப்போது மண்டோதரி அங்கு ஓடிவந்து இராவணனின் கையைப் பிடித்து, இராவணனைத் தடுத்தாள்.

‘ஓர் ஆணின் மீது விருப்பமில்லாத ஒரு பெண்ணை சம்மதிக்க வைப்பதற்காக அவளைத் துன்புறுத்துவதும், கொலை செய்ய முயற்சிப்பதும் மகா பாதகம். இத்தகைய செயல் உம்மை மட்டுமல்ல, உம்மைச் சார்ந்த அத்தனை பேரையும், உன் சாம்ராஜ்யத்தையும் சேர்த்து அழித்திடும்’ என மண்டோதரி இராவணனுக்கு அறிவுரை செய்தாள். அதன் பின்னர் இராவணன் சீதையைக் கொலை செய்யும் எண்ணத்தை விடுத்தான்.

மண்டோதரி சீதையின் தாயா?

மண்டோதரி சீதையின் தாய் என வால்மீகி இராமாயணத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆயினும், அத்பூத இராமாயணம், தேவி பாகவத புராணம் மற்றும் சமண இலக்கியங்கள் மண்டோதரியை சீதையின் தாய் என குறிப்பிடுகின்றன. இராமாணயத்தில் சுவாரஸ்யத்தை ஏற்றுவதற்காக அவ்வாறு கூடுதலான கதையை உருவாக்கியிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

|| மண்டோதரியின் அறிவுரை

இராமாயணத்தில் மண்டோதரி ஒரு துணை கதாபாத்திரமாக அமைந்திருந்தாலும், அவளின் பாத்திரம் மிகவும் முக்கியமானது. அவள் தன் கணவன் மீது அளவுகடந்த காதல் கொண்டிருந்தாலும், ஒருபோதும் தன் கணவனின் தீய செயல்களுக்குத் துணை போகவில்லை. மாறாக இறுதிவரை அவள் நேர்மையானவளாகவே திகழ்ந்தாள்.

”ஒரு பெண்ணின் அனுமதியும் சம்மதமும் இல்லாமல், எந்தவொரு ஆணும் அவளை நெருங்க கூடாது. ஒரு பெண்ணுக்கு சம்மதம் இல்லாவிட்டால் அவளை விட்டு விலகி விட வேண்டும், அவளைக் கட்டாயபடுத்தியோ மிரட்டியோ சம்மதிக்க வைப்பது மூடத்தனம். தன்மீது அன்புடைய மனைவியின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து அவளின் அறிவுரையைக் கேட்டு நடக்க வேண்டும்.” – இதுவே மண்டோதரியின் பாத்திரம் உணர்த்தும் தத்துவம்.

No comments:

Post a Comment